வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

 


தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வில் அறிவித்தார்கள்.

ஆகவே, தொழிற்புரட்சிக்கு முன்னர் உலோகவியல் தொழில்நுட்பம் பரவியிருந்த தளங்களைப் புரிந்துகொள்வது முக்கியமானது. ஏனென்றால், இந்தத் தொழிநுட்பமே சமூக வளர்ச்சியின் முக்கியமான கூறாக விளங்கியுள்ளது. அந்த வகையில் மதிப்புமிகு ஆடம்பரப் பொருட்கள், அன்றாட உபயோகப்பொருட்கள், ஈமச்சடங்கு சார் பொருட்கள் என எண்ணற்ற பொருட்களை உருவாக்குவதற்குத் தேவையான கனிமவளங்கள், தேவைக்கேற்ற உற்பத்தி, நுகர்பொருட்களாக உருவாக்குவதற்குத் தேவையான கனிமவளங்கள், தேவைக்கேற்ற உற்பத்தி, நுகர்பொருட்களாக மாற்றுவதற்கான உயர்தொழில்நுட்பம், பொருட்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு வேண்டிய வணிகப் பரிமாற்றத்திற் கான சூழல் ஆகியவற்றை அச்சமுகம் பெற்றுத் திகழவேண்டும். இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த சமூக மேம்பாட்டை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு மரபுசார் தொழில்நுட்பங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தொல்லியல் களஆய்வு மற்றும் அகழாய்வுகள் வாயிலாக அறிவியல் துணைகொண்டு உறுதி செய்ய முயல்கிறது.

தமிழகத்தில் அண்மைக்காலங்களில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கீழ்நமண்டி, மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஆகிய தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளும், அறிவியல் அடிப்படையிலான காலக்கணக் கீடுகளும் இதுவரை தமிழகம் பெற்றிருந்த தொன்மையான தொழில்நுட்பம் தொடர்பான முந்தைய கருதுகோள்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் அல்லது இரும்பின் அறிமுகம் என்பது கி.மு.நாலாயிரத்தின் முற்பகுதியைச் சார்ந்தது எனவும், அதாவது இரும்பின் தொன்மை 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் துணைகொண்டு நிறுவப்பட்டுள்ளது. தொல்லியலாளர்களின் இடையறாத முயற்சியின் வாயிலாகப் பெற்ற இந்த அண்மைக்கால சான்றுகளைப் பொதுமக்கள் முன்பாக வைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்;” என்று அப்போது குறிப்பிட்டார்கள். முதல்வர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இரும்புப்பயன்பாட்டில் தமிழர்கள் உலகிலே முன்னோடியாக இருந்துள்ளனர் என்பது இப்போது ஆய்வின் முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்தியாவின் பரந்துபட்ட தொன்மையான வரலாறு அதன் ஒவ்வொரு நிலப் பகுதியிலும் விளங்கிய; அந்தந்த நிலப்பகுதிக்கே உரிய, தனித்துவமான வளங்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது; தனித்தன்மை கொண்ட பல்வேறு துறைகளின் தொடர்ச்சியான இடையறாத பண்பாட்டு மற்றும் தொழில்நுட்பப் போக்காலும் இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு வளங்களையும் தொழில்நுட்பங்களையும் போல, தென்னிந்தியாவின் வரலாற்றை, குறிப்பாகத் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தொன்மையான இரும்புத் தொழில்நுட்பம் வடிவமைத்தது. இதற்குத் தமிழ்நாட்டில் வணிகத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவிற்குக் கிடைத்த இரும்புத் தாது முதன்மைக் காரணமாக விளங்கியது.” என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பது மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செம்பு மற்றும் வெண்கலக் கருவிகளுக்கு மாற்றாக இரும்புக்கருவிகள் மலிவானவையாகவும் நீடித்த தன்மைகொண்டவையாகவும் அதிக திறன் கொண்டவையாகவும் கருதப்படுகின்றன. இந்தக் காரணங்களால் இரும்பின் பயன்பாடு வேளாண் உற்பத்தியை விரைவுபடுத்திச் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு.15ஆம் நூற்றாண்டின் (IUACD 23C5689 Cal.1441 BCE) இடைக்காலத்தைச் சார்ந்த உயர்தர தகர – வெண்கலப் பொருட்கள் (high-tin bronzes) அதிக எண்ணிக்கையில் கிடைத்தன. மேலும், சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம் (உலைப்பட்டி), திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களில் உள்ள ஈமத் தாழிகளிலும் இவை கண்டறியப்பட்டன.

இரும்புப் பொருட்களுடன் இவை கண்டறியப்பட்டதால் உயர்தர தகர – வெண்கலப் பொருட்களை இரும்புக் காலத்தோடு இணைத்துக் கருதமுடியும். பொதுவாக, செம்பு உருக்கும் தொழில்நுட்பம் இரும்புத் தொழில்நுட்பத்தை விட காலத்தால் முந்தியது என்று கருதப்படுகிறது. அண்மைக்கால அகழாய்வுகளில் ஈமத் தாழிகளில் கண்டறியப் பட்ட அதிக எண்ணிக்கையிலான உயர்தர தகர – வெண்கலப் பொருட்கள் அனைத்தும் முழுமையடைந்த பொருட்களாக உள்ளன.

பொதுவாக இயற்கையில் காணப்படும் இரும்புத் தாதுக்கள் ஆக்சைடு வடிவங்களில் காணப்படுகின்றன. இரும்பு உருக்குதலுக்கு தேவைப்படும் கேமடைட், மேக்னடைட், லிமோனைட், கோதைட் போன்ற இரும்புக்கனிமத் திரள்கள் அருகாமையில் கிடைப்பது இரும்புத் தொழிற்கூடங்கள் உருவாக காரணமாகக் கருதப்படுகிறது. இரும்பை உருக்க 1200 முதல் 1400 செல்சியஸ் வரையிலான வெப்பம் தேவைப்படுகிறது. ஆகவே இரும்பை உருக்க தேவைப்படும் எரிபொருள். உலைக்கலன்கள் கட்டமைத்தல், துருத்தி, ஊதுளை, காற்றின் திசை, காலம் அறிந்து செயல்படுதல் போன்ற அனைத்தும் இணைந்து செயல்வடிவம் பெறுகிறது.

உலகில் தொன்மையான இரும்புப் பற்றி இரண்டு வகையான புரிதல் இருந்தது. ஒன்று, விண்கல் இரும்பினாலான தொல்பொருட்கள், இரண்டாவது, இரும்புத் தாதை உருக்கிச் செய்யப்பட்ட பொருட்கள், இரண்டாவது வகை இரும்புத் தொழில்நுட்பமே உலகில் இரும்புத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்தத் தொழில்நுட்பமே அதிகளவிலான இரும்பு உற்பத்திக்குக் காரணமாக இருந்துள்ளது. எனினும், 1911ஆம் ஆண்டு வடக்கு எகிப்தின் கீழ்நைல் பள்ளத்தாக்கில் அல்-கெர்செவில் உள்ள கல்லறைகளில் விண்கல் இரும்பினால் செய்யப்பட்ட குழாய் வடிவிலான ஒன்பது மணிகள் கண்டறியப்பட்டன. ஏழு மணிகள் 67ஆம் எண் கல்லறையிலும் இரண்டு மணிகள் 133ஆம் எண் கல்லறையிலும் கண்டறியப்பட்டன. இவையே, உலகிலேயே அறியப்பட்ட தொன்மையான இரும்பினாலான தொல்பொருட்கள் என்று கருதப்படுகின்றன. இவ்விரு கல்லறைகளும் நகாடா IIC-IIIA காலத்தைச் சார்ந்தவை. இவற்றின் காலம் கி.மு. 3400-3100 என்று கணிக்கப்பட்டுள்ளது. (Stevenson 2009:11-31). விண்கல் இரும்பில் செய்யப்பட்ட இத்தகைய மணிகள், உருளை வடிவத்தில் உருட்டும்முன் இவ்வுலோகத்தைக் கவனமாகத் தட்டி மெல்லிய தகடுகளாக மாற்றியுள்ளனர். இரும்பு உருக்கும் தொழில் நுட்பம் அறிமுகமாவதற்கு ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொதிநிலையில் உள்ள விண்கல் இரும்பைப் பயன்படுத்துவதில் கொல்லர்கள் அனுபவம் பெற்றிருந்தனர் என்று அறிஞர்கள் நம்புகின்றனர் (Thilo Rehren et.al. 2013: 4785-4792).

இரும்புத் தொழில்நுட்பம் மிகப் பழங்காலத்திலேயே இருந்துள்ளது என்று கருதப்பட்டாலும் தற்பொழுது கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் இரும்புத்தாதுவிலிருந்து உருக்கிச் செய்யப்படும் இரும்புத் தொழில்நுட்பம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளின் இடைப் பட்ட காலத்தில்தான் தொடங்கியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. (Walbaum 1999).

இரும்பைப் பயன்படுத்தும் கலை மனித வரலாற்றின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரும்புப் பயன்பாடு தன்னிறைவு பெற்ற வேளாண்மைப் பொருளாதாரத்தை மிகை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றியது. இதன் விளைவாக மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டு பல குடிவழிச் சமூகம் உருவானது. அதனுடன் பல்வேறு அடிப்படை மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டன. இரும்புத் தொழில்நுட்பம் பண்டைய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை விரைவாக ஊக்குவித்தது என்றே கூறலாம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட, இரும்பின் அறிமுகம் மனிதகுல வளர்ச்சியில் முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே, இந்தியாவில் இரும்பின் அறிமுகம் பற்றிய கல்விசார் விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலமானது, பல்வேறு அறிஞர்களின் தளராத முயற்சியின் காரணமாக கி.மு.1100இல் இருந்து
கி.மு.இரண்டாயிரம் ஆண்டாகக் கருதப்படுகிறது (படம் 3; அட்டவணை 1). எனவே, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறுபட்ட சூழலியல் மண்டலங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு கதிரியக்கக் காலக்கணிப்புகள் வாயிலாக இந்தியாவில் இரும்பின் அறிமுகம் கி.மு.2000ஆம் ஆண்டு என அறுதியிடப்பட்டுள்ளது (Seshadri  1955:38-41; Sundara 1973:239-251:Deo 1973:131-137. 1991:189-198: Possehl 1988:169-196; Moorti 1994; Rajan and Yathees Kumar 2013:279-295). தமிழ்நாட்டில் இரும்புக்கால ஈமச் சின்னங்களில் மேற்கொள்ளப் பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகளும் (Chronometric dates) அவற்றை உறுதிப்படுத்தியுள்ளன.

பெர்சியின் Metallurgy : Iron and Steel என்ற நூலில் தொழிற்சாலைகளுக்கு முன்பிருந்த இரும்பு உருக்கு உலைகளின் மூன்று அடிப்படை வகைகளை விவரிக்கிறார். அவற்றில் முதல் இரு வகைகள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் (Percy 1864: 254-270). கீழ்க்கண்ட தொல்லியல் தளங்களில் கண்டறியப்பட்ட முதல் இரு வகையான உலைகளின் விவரங்கள் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரும்பினைக் கொண்டுள்ள மேக்னடைட் குவார்ட்சைட் மற்றும் லேட்டரைட் கனிமங்களை உள்ளடக்கிய பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளூர், பெருங்களூர், வல்லத்திராக்கோட்டை ஆகிய இடங்களிலும், மேக்னடைட் தாதுக்களைக் கொண்டுள்ள பகுதிகளான செட்டிபாளையம், இடையர்பாளையம், இருகூர், கணியாம்பூண்டி, நிச்சாம்பாளையம், கொடுமணல் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட உலைகளின் தன்மையை விவரிக்கிறது.

ஜான் பெர்சியின் வகைப்படுத்தலின்படி முதல் வகை உலைகள் மிக எளிமையானதும், மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதும் ஆகும். இவ்வகை உலைகள் வட்ட வடிவில் 2 முதல் 4 அடி உயரம் கொண்டதாகக் காணப்படும். அதன் அடிப்பகுதியில் உலை அடுப்பின் விட்டம் 10 முதல் 15 அங்குலமும் உலையின் மேல் பகுதி 6 முதல் 12 அங்குலமும் கொண்டிருக்கும். இந்த உலை முழுவதும் களிமண்ணால் கவனமுடன் உறுதி உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கீழுள்ள பகுதி விரைவாக பழுதாகிவிடுவதால் சுவர்கள் புதிய களிமண்ணால் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டிருந்தது. உலையின் கீழ்ப்பகுதி இரண்டு வழிகளை, திறப்புகளைக் கொண்டிருந்தது. ஒன்று கழிவுகளான சாம்பல்கள் வெளியேறுவதற்கும், மற்றொன்று தாதுக்கள் உருகி வெளியேறவும் அல்லது புரைம இரும்பை (sponge iron) வெளியே எடுப்பதற்கும் பயன்பட்டன.

இரண்டாவது வழி/திறப்பு, இரண்டு சுடுமண் ஊதுலைகள் பொருத்தப்பட்டு அவை துருத்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். இரு வழிகளும் அடுப்பைப் பற்றவைக்கும்முன் களிமண்ணால் கவனமாக மூடப்பட்டன. கழிவுகளை வெளியேற்றும் பகுதி பொதுவாக புரைம இரும்பை வெளியேற்றும் பகுதிக்குப் பக்கத்தில் இருந்தது. உலைக்காற்று வழி என்னும் ஊதுலைத் திறப்புகள் முன்பக்கத்தில் இருந்தன. ஊதுலைக் குழாய்களின் 12 அங்குல நீளமும், உட்பகுதி ஓர் அங்குல விட்டமும் கொண்டிருந்தது. அவற்றைப் பக்கத்தில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தது. ஊதுலையின் அடிப்பகுதியிலிருந்து மூன்று முதல் நான்கு அங்குலத்திற்கு மேலே இரண்டு முதல் நான்கு அங்குல அளவில் உலையினுள் செருகப்பட்டிருந்தது.

கொடுமணல் அகழாய்வில் வெளிப்படுத்தப் பட்ட இரும்பு உலைக்கு மேலே கூறப்பட்ட விளக்கமானது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. வாழ்விடப்பகுதியின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட குழியில், 65 செ.மீ. ஆழமும் 115 செ.மீ. விட்டமும் கொண்ட ஒரு வட்ட வடிவ உலை கிடைத்தது. உலையின் உள்சுவரை ஒட்டியிருந்த இரும்புக் கழிவுகள் மென்மையான மேற்பரப்பைக் கொண்டிருந்தது. 15 செ.மீ. நீளமும் 6 செ.மீ. தடிமனும் 1.5 செமீ.

துளைவிட்டமும் கொண்ட ஊதுலைகள் கண்டெடுக்கப்பட்டன. எனவே, உலைக்கு மிக அருகில் துருத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவை உணர்த்துகின்றன. கொடுமணலில் அகழப்பட்ட உலை, இரும்பு ஆக்சைடுகளை இரும்பாக மாற்ற குறைந்த பட்ச வெப்பநிலைத் தேவையைவிட 1300oc வெப்பநிலை வரை அடைந்திருக்கலாம்.

அதிகமான இரும்புக் கழிவுகளைக் கொண்ட இத்தகைய உலைகள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள இடையர்பாளையத்திலும், ஈரோடு அருகே நிச்சாம்பாளையத்திலும், பல்லடம் அருகே செட்டிப்பாளையத்திலும் கண்டறியப்பட்டன. இந்த மூன்று மிக முக்கியமான தொல்லியல் தளங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

பெர்சியின் கூற்றுப்படி, இரண்டாவது வகை உலை நிலத்தில் 8 முதல் 12 அடிக்கு குழி தோண்டி அதில் கிண்ண வடிவத்தில் பதினைந்து முதல் இருபத்தியோரு அங்குல விட்டத்தில் 8 முதல் 10 அடி உயரம் கொண்டதும், 5 முதல் 6 அங்குலம் தடிமம் கொண்டதும் நிலத்திற்கு மேலாக இரண்டரை அடி உயரம் இருக்கும் வகையில் நன்கு உறுதியுடன் களிமண் கொண்டு உலைகள் உருவாக்கப்பட்டன.
மூன்றாவது வகை உலைகள் தரமான இரும்பையும் எஃகையும் தயாரிக்க பயன்படுத்தப் பட்டது. எனினும் இதுபோனற் மூன்றாவது வகை உலைகளைத் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கண்டறியப்படவில்லை. அப்படி இந்த உலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நமது ஆராயச்சியில் இதுவரை கிடைக்கவில்லை. எதிர்கால அகழ்வாராய்ச்சியும் ஆய்வுகளும் இதில் சிறிது ஒளி பாய்ச்சக்கூடும். இருப்பினும்,

அரியாணிப்பட்டி மற்றும் வெங்கடநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் பல தொல்லியல் தளங்கள் உலைப் பொருட்களுடன் கண்டறியப்பட்டுள்ளன.

மாங்காடு, கீழ்நமண்டி, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் உள்ள இரும்புக் கால ஈமக்குழிகளில்
இருந்து பெறப்பட்ட சான்றுகளின் அண்மைக் காலத்தில் பெறப்பட்ட துரிதபடுத்தப்பட்ட நிறை நிறமாலை கதிரியக்கக் கரிம காலக்கணிப்புகள் (ஏ.எம்.எஸ்.- AMS14C) மற்றும் தூண்டொளி (OSL) காலக்கணிப்புகள் தமிழ்நாட்டில், இதுவரை இரும்பின் தொன்மை பற்றிக் கொண்டிருந்த கருத்தை மறுபரிசீலனை செய்யவைத்துள்ளன.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டத்தில் கீழ்நமண்டியில் (120 22′ 36” N; 790 31′ 24” E)
2023 ஜூலை-ஆகஸ்டில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு ஈமக்குழியில் ஈமப்பேழையும் (MEG-3), கல்லறையில் மற்றொரு ஈமப்பேழையும் (MEG-6) கண்டெடுக்கப்பட்டது (Gnanaraj et.al., 2023:425-432) ஈமப்பேழையுடன் கூடிய முதல் ஈமக்குழியில் இருந்து பெறப்பட்ட இரும்பு மாதிரி காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வழக்கமான காலக்கணிப்பு கி.மு.1450 எனவும், இதன் கேலிபரேட்டட் காலம் தோராயமாகப் கி.மு.1769-1615 என்றும் (Beta 66672 காலம் 3400 + 30 BP), அதன் சராசரி காலம் கி.மு.1692 என்றும் காலம் கணிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் (12 ”26′ 28.43” N;78” 20′ 1.22” E) 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் நுண்கற்காலத்திலிருந்து இடைக்காலத்தின் பிற்பகுதி வரையிலான பல்வேறு பண்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இங்கு கிடைத்த இரும்பின் மாதிரி இரண்டு AMS14C கேலிபரேட்டட் காலத்தை வழங்கியது. அவை கி.மு.1615 மற்றும் கி.மு.2172
(Rajan et.al., 2022) ஆகும். மேலும், தோண்டப்பட்ட குழியிலிருந்து கிடைத்த மட்பாண்டங்களும் இரும்புப் பொருள்களும் இதற்கு அருகில் தோண்டிய ஈமக்குழியிலிருந்து கிடைத்தமட்பாண்டங்களோடு பொருந்துகின்றன. எனவே. கி.மு.2172இல் தமிழகத்தில் இரும்பு

பயன்படுத்தப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு 5000 ஆண்டுகளுக்கு முன்பே  தமிழர்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தி யுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது இப்போதைய ஆய்வுகளின்
படியான முடிவு மட்டுமே. இன்னும் இது சார்ந்த ஆய்வுகள் தொடரும்போது இன்னும் இக்கால அளவு கூடும். காரணம் தமிழர்களின் அறிவு நுட்பமும் தொழில்நுட்பமும் அத்தகு தொன்மை வாய்ந்தது.

“இரும்புப் பயன்பாட்டில் தமிழர்களே உலகிற்கு முன்னோடி!” என்ற முதல்வரின் அறிவிப்பு சரியானது; பெருமைக்குரியது.
ஆனால், இதில் ஒரு கூடுதலான செய்தி இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி.

கணித அறிவிலும்
தமிழர்களே முன்னோடி

பித்தாகரஸ் தேற்றம் உருவாக்கத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அக்கணித சூத்திரத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்கள் உருவாக்கிய அச்சூத்திரம்தான் கிறித்துவ பாதிரியார்கள் மூலம் பித்தாகரஸைச் சென்றடைந்து அதன் அடிப்படையிலேதான் பித்தாகரஸ்தேற்றம் உருவாக்கப்பட்டது.

கணிதசூத்திரம் என்ற தமிழர் நூலில், முக்கோணத்திற்கு கர்ணம் கண்டறிய பாடல் வடிவில் சூத்திரத்தைத் தமிழர்கள் உருவாக்கினர்.

“ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறாக்கி,
கூற்றதில் ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கர்ணம் தானே.”

என்பதே பாடல். முக்கோணத்தின் அடிமட்ட நீளத்தை எடுத்து அதை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியைத் தள்ளி(கழித்து)விட்டு, செங்குத்து உயரத்தில் பாதியை எடுத்து அந்த ஏழு பகுதியுடன் சேர்த்தால் கர்ணம் வரும் என்பதே அச்சூத்திரம்.
எடுத்துக்காட்டாக முக்கோணத்தின் அடிநீளம் 16 அங்குலம் என்றால் அதை எட்டாகப் பகுத்தால் ஒரு பகுதி 2 அங்குலம். அதை மொத்த நீளமான 16 அங்குலத்தில் கழிக்க வேண்டும். அப்படிக் கழித்தால் கிடைப்பது 14 அங்குலம்.
குன்றம் என்பது முக்கோணத்தின் செங்குத்து உயரம் 10 அங்குலம் என்றால் அதில் பாதி 5 அங்குலத்தை எடுத்துக்கொண்டு, அதை அந்த 14 அங்குலத்துடன் கூட்டவேண்டும்

(சேர்க்கவேண்டும்). அதாவது 14+5=19 அங்குலம் கிடைக்கும். ஆக, அந்த முக்கோணத்தின் கர்ணம் 19 அங்குலம்.

உலகப் புகழ் பெற்ற பித்தாகரஸ் தேற்றத்திற்கே அடிப்படைச் சூத்திரம் தந்தவர்கள் தமிழர்கள் என்பது இதன்மூலம் விளங்குகிறது.
அதேபோல் வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிக்கவும் தமிழர்கள் கணிதசூத்திரம் கூறியுள்ளனர்.

“வட்டத்து அரை கொண்டு
விட்டத்து அரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி”
(கணக்கதிகாரம் 46 செய்யுள்.)

குழியென்பது பரப்பு. வட்டத்தின் சுற்றளவை அளந்து அதில் பாதியை எடுத்துக்கொண்டு, விட்டத்தின் அளவில் பாதியை எடுத்து இரண்டையும் பெருக்கினால் வட்டத்தின் பரப்பு கிடைக்கும் என்கின்றனர்.

எடுத்துக்காட்டாக வட்டத்தின் சுற்றளவு 44 அங்குலம். அதில் பாதி 22 அங்குலம். வட்டம் அங்குலம் அதில்பாதி 14/7 அங்குலம் 22அய் 7ஆல் பெருக்கினால் வட்டத்தின் பரப்பு கிடைக்கும் என்று கூறினர். ஆகக் கணித அறிவில் உலகிற்கே வழிகாட்டியாக, முன்னோடியாக தமிழர்களே இருந்தனர் என்பதை இது உறுதி செய்கிறது.

காலக்கணக்கீட்டில்  தமிழர்களே முன்னோடி

நாள்: சூரியன் தோன்றி மீண்டும் தோன்ற எடுத்துக்கொள்ளும் காலம்.
மாதம்: ஒரு முழு நிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம்.
ஆண்டு: சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று மீண்டும் தெற்கை அடைய ஆகும் காலம்.

சூரியன் நகராமல் ஒரே இடத்தில்தான் உள்ளது. ஆனால், பார்க்கும்போது சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், பின்வடக்கிலிருந்து தெற்கிற்கும் செல்வது போன்று தோன்றுகிறது. அதை வைத்து ஆண்டைக் கணக்கிட்டனர்.

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது தை 1ஆம் நாள். இதுவே ஆண்டின் தொடக்கம் என்று தமிழர்கள் கணக்கிட்டனர். இக்கணக்கீட்டை ஒட்டியே ஜனவரி 1 என்ற  கணக்கீடு கணக்கிடப்பட்டது. ஆக, காலக்கணக் கிட்டிற்கு தமிழர்களே முன்னோடி.

அணை கட்டுமானம்

ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் உலகிற்கே முன்னோடியாகத் தமிழர்களே விளங்கினர். தமிழர்கள் கட்டிய கல்லணை அதற்குச் சரியான சான்று உலகில் அணைகள் கட்டப்படுவதற்குமுன், தலைசிறந்த தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டது கல்லணை. உலகிலுள்ள பொறியியல் வல்லுநர்கள் இன்றைக்கும் கல்லணைக் கட்டுமானத்தைக் கண்டு வியக்கின்றனர். அக்காலத்திலே இவ்வளவு நுட்பமா வியக்கின்றன!

கப்பல் கட்டுமானம்

கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறன்மிக்கவர்களாய் இருந்தனர். கப்பற்படை நடத்தினர். நாடுகள் பலவற்றைக் கடல் கடந்து சென்று வென்றனர். கடல் கடந்து சென்று கூடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் என்பது இதற்குச் சரியான சான்று.

பிரமிடு

எகிப்தில் உள்ள பிரமிடு தமிழர்கள் கட்டியது. எகிப்தைத் தமிழர்கள் ஆண்டனர். பிரமிடு என்பதே தூய தமிழ்ச் சொல். பெரும் இடு என்பதன் மரூஉச் சொல்லே பிரமிடு. இடுதல் என்றால் புடைத்தல். அதன் அடிப்படையில் வந்ததே இடுகாடு. குடிமக்கள் புதைப்படுவது சிற்றிடு. மன்னர்கள் புதைக்கப்படுவது பெரும் இடு. மன்னர்கள் புதைக்கப்பட்ட பெரும் இடு என்பதே பிரமிடு என்று பின்னாளில் வழங்கப்படுகிறது.

உலகம் வியக்கும் பிரமிடுகள் தமிழர்களால் கட்டப்பட்டவை. பிரமிடு கட்டப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் நுட்பமானது.

மருத்துவம்

தமிழர்களின் மருத்துவம் உலகிற்கே வழிகாட்டக்கூடியது. சித்த மருத்துவம் தமிழர்களுடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடையது. அதிலிருந்து உருவாக்கப்பட்டதே ஆயுர்வேதம்.

இசை

இசைத்துறையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திறன் பெற்றவர்
கள் தமிழர்கள். தமிழிசையிலிருந்து உருவாக்கப் பட்டதே கர்நாடக இசை.

ஆடற்கலை

பரத நாட்டியம் தமிழர் நாட்டியக்கலை. இதுவும் தொன்மை உடையது. மற்போர் கலை, சிலம்பம், வளறு எறிதல் என்று பலவற்றிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர்.

மொழி

உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழே மூலம். தமிழிலிருந்தே ஆங்கிலம், கிரேக்கம், ஜப்பான் மொழி, சமஸ்கிருதம் என்று பலவும் உருவாகின. இந்த உண்மைகள் உலக மொழியியல் அறிஞர்களால் ஏற்கப்பட்டவை. இவை குறித்து உண்மையில் நாம் விரிவாக எழுதியுள்ளோம்.

ஆக, இரும்பின் பயன்பாட்டில் மட்டுமல்லாது, எல்லாவற்றிலும் உலகுக்கு முன்னோடி தமிழர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. இன்னும் ஆய்வுகள் தொடரத் தொடர தமிழர்களின் தொன்மை சிறப்பு மேலும் துலங்கும். 

- உண்மை இதழ், 1-15.2.25

ஞாயிறு, 23 மார்ச், 2025

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

 

படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதன்பின், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாகப் பிரிந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை, ஈரோடு என பிரிந்தது. இதுதான், தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பிரிந்த காலகட்டம்.

புதிய மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் என்றில்லை. இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாவதும் புதிதொன்றுமல்ல. தமிழ்நாட்டிலும் மாவட்டங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு, சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இவை நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது.

தலைவர்களின் பெயர்கள்

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார்.

நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, “நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்” என அழைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவர் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது விவாதப் பொருளானது. அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் அண்ணா பெயர் சூட்ட வேண்டும் என்று கலைஞர் கோரிக்கை வைத்தார். பின்னர் 1989-இல் கலைஞர் முதலமைச்சரானதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணாவின் பெயரைச் சூட்டினார்.

பெயர் நீக்கம்

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின் சம்புவரையர் பெயரில் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இப்படி பல தலைவர்களின் பெயர்களில் தமிழ்நாடு மாவட்டங்கள் இருந்தன. 1996 காலகட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.
தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. மேற்காணும் தாலுகாக்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்.

1966-ஆம் ஆண்டு முதல்…
1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம்;
1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம்;
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்;
1985: மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்;
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம்;
1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம்;
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்;
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்;
1993: தென்னார்க்காடு மாவட்டத்தைப் பிரித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்;
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள்;
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து தேனி மாவட்டம்;
1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து நாமக்கல் மாவட்டம்;
1997: செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்;
2004: தருமபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம்;
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து அரியலூர் மாவட்டம்;
2009: கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம்;
2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம்.
தனித்துவம்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறீவில்லிபுத்தூர், விருதுநகர் (விருதுபட்டி), சாத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. எத்தனை மாவட்டங்களாகப் பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, தண் பொருநைப் புனல்நாடு எனச் சேக்கிழாரும்,
பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி வரிகள் இந்த மாவட்டப் பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?

நாட்டின் விடுதலைக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது. 1967-ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனதும், சைதாப்பேட்டையில் இருந்த இந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாகத்துக்கு காஞ்சிபுரமும், வழக்கு மன்றத்துக்கு செங்கல்பட்டு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1997ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை இருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்பட்டன

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுகுன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை சேர்க்கப்பட்டன.

38 மாவட்டங்கள்

13 மாவட்டங்களாக இருந்து, இன்றைக்கு 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி மட்டும்தான் இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களாகும்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டமாக மலர்ந்தது, கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முசிறி தனி மாவட்டமாக வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்திலிருந்து மேச்சேரி தனி மாவட்டமாக வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நிர்வாக வசதி

மாவட்டங்கள் பிரிப்பு என்பது விரைவான நிர்வாக பலாபலன்கள் பெறுவதற்கும், திட்டங்களுடைய பயன்கள் உடனே மக்களைச் சென்றடைவதற்கும் பயன்பட வேண்டும்.
இன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, எல்லாப் பகுதிகளுக்கும் விரைந்து செல்வதற்கு சாலை, வாகன வசதிகள் இருந்தும்கூட மக்கள் நலப் பணிகளை நேரடியாக கண்காணிக்கச் செல்வதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முனைவதில்லை. ஏதாவது திட்டம் சரியில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் அன்றைய முதலமைச்சர்களிடமே சொல்லக்கூடிய துணிவு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்தது.
சிறிய மாவட்டங்கள் அமைவதைப் போலவே, அரசியல் தலையீடு இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நிர்வாகமும் அமைந்துவிட்டால், வளர்ச்சியை அதிவிரைவாக உறுதிப்படுத்த முடியும்.


வியாழன், 24 அக்டோபர், 2024

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

 Published October 21, 2024

விடுதலை நாளேடு

நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் அனுமன் நதி, மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி தென்காசி மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு சாம்பவா் வடகரையைக் கடக்கும் இடத்தில் ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் படித்துறையில் 114 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு சிறீ என்ற எழுத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 1086 ஆவணி 1 ஆம் தேதி (17/08/1910) மலையாளப் புத்தாண்டு தொடங்கும் நாளில் பொறிக்கப்பட்டுள்ளது.
சங்கரலிங்கய்யா் பேரனும் சாமுவய்யா் மகனுமான ராமய்யா் என்பவா் இந்தப் படித்துறையைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகுந்த எழுத்துப் பிழைகளுடன் தமிழிலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அருகே இருப்பதால் மிகுந்த முக்கியத்துவவம் பெறுகிறது.

மதுரை அன்னியா் வசப்பட்டபின் தெற்கே தென்காசி சென்ற பிற்காலப் பாண்டியா்கள், அங்கிருந்து ஆட்சிபுரியத் தொடங்கினா். கி.பி.15 ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியா்களில் மிகவும் புகழ்பெற்றவரும் தீவிர சிவபக்தருமான பராக்கிரம பாண்டியன், சிவன்கோயில்கள் பல எடுப்பித்து அக்கோயில்களில் சிவபூஜை தடையின்றி தொடர சிவபிராமணா்களுக்கு அய்ந்து அகரங்கள்(அக்ரஹாரம்) அமைத்துக் கொடுத்தார் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கும் அவரது மெய்க்கீா்த்தியில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறு அவா் அமைத்துக் கொடுத்த ஒரு அகரம்தான் சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அகரம். இந்த அகரத்தைச் சோ்ந்த சிவபிராமணா்களின் வழிவந்தவரான ராமய்யா் என்பவா்தான் சென்ற நூற்றாண்டில் இந்தப் படித்துறையை அமைத்து கல்வெட்டு பொறித்தார் என்பது தெரிகிறது.
அகரத்தை (அக்ரஹாரத்தை) சோ்ந்த பார்ப்பனா்கள் மட்டும் நீராடுவதற்கு இந்த கிளை வாய்க்கால் படித்துறை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அனுமன் நதியில் பிற பொதுமக்கள் நீராடி இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் ‘தா்மோ ரக்ஷகக் கபிம்’ என்று கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த தா்மத்தை அனுமன் காப்பார் என்பதாகும் என்றனா்.

பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு

 


விடுதலை நாளேடு

திருவள்ளூர், அக். 21- திருவள்ளூர் அருகே மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் சிறீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ளது.

இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், சிறீசிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.
அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக் கப்பட்ட இரு செப்பேடுகள் கண் டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த செப்பெடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந் ததால், அதன் ஒளிப்படங்களை கருநாடகா மாநிலம்- மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, செப்பேடுகளின் ஒளிப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம், ‘‘சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பார்ப்பனர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக மாநில தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

 Published February 16, 202, விடுதலை நாளேடு

பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது.
பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர் கள் தங்கம், ராஜேஸ்வரி தலை மையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழை மையான தடுப்பணை கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக் கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந் தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதி யில் உற்பத்தியாகி, காட்டாறாக சில கி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற் றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட் டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணை யின் சிதைந்துபோன இடிபாடு களில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடு கிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக் குளத்திலும் கலப்பதால் அப் பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்து கிறது.

ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம் இந்த தடுப்பணையில் அமைக்கப் பட்ட மதகுகள் மூலம் 3 குளங் களையும் நிரப்பிவிட்டு, இறு தியாக சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட் டாற்று வெள்ளம் தடுப்பணை யையும், மதகுகளையும் உடைத் தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்த மானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண் டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10ஆம் நூற் றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப் பணை கி.பி.10ஆம் நூற்றாண் டில் கட் டப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள் ளது. பூச்சு விலகாமல் இருக்க வும், கரையின் மேற்புறப் பிடி மானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென் படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 30 மே, 2023

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

 

 7

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. 

தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபு களை பாதுகாத்து வந்துள்ளனர்.

ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள் ளது. ஓலை யில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத் தாலான எழுத் தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச் சுவடிகள் பாது காப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் சுவடியியல் துறைப் பேராசிரியரு மான சு.தாமரைப் பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டு பிடித்துள்ளார்.  

மதுரையில் சிவக்குமார், திருநெல் வேலியில் ராமலிங்கம், கன்னியா குமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச் சுவடிகளைத் தேடும் போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:

தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந் துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில் நுட்பக் கருவி யான எழுத்தாணிகளையும் பாது காப்பது அவசியம். அகநானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, பெருங் கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல் களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப் படுகின்றன.

மந்திர ஓலை, சபையோலை, அறை யோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன் னோலை, படியோலை என்று அழைக் கப்பட்டன. ஓலை களைப் பாதுகாக் கும் இடம் ஆவணக் களரி என்றழைக் கப்பட்டது. 

எழுத்தாணியால் ஓலையில் எழு துவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத் தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன.

பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத் தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், பெருங் கதையில் குறிப்பிடும் வெட் டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. 

ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக் குவதுபோல் மரபு தொழில் நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப் பதும் அவசியம் என்றார்.

எழுத்தாணி வகைகள்: 

குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத் துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண் டைப் பகுதி கனமாகவும் குண் டாகவும், முனைப் பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப் படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணியை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப் பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரி கள்வரை எழுதலாம். வாரெழுத் தாணிய£னது சற்று நீளமாக இருக்கும். 

கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மை யாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது. மடக் கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறு முனையில் கூராகவும் உள் ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக் கெழுத்தாணி என்றானது.

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...