ஞாயிறு, 23 மார்ச், 2025

தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

 

படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதன்பின், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாகப் பிரிந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை, ஈரோடு என பிரிந்தது. இதுதான், தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பிரிந்த காலகட்டம்.

புதிய மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் என்றில்லை. இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாவதும் புதிதொன்றுமல்ல. தமிழ்நாட்டிலும் மாவட்டங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு, சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இவை நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது.

தலைவர்களின் பெயர்கள்

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார்.

நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, “நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்” என அழைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவர் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது விவாதப் பொருளானது. அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் அண்ணா பெயர் சூட்ட வேண்டும் என்று கலைஞர் கோரிக்கை வைத்தார். பின்னர் 1989-இல் கலைஞர் முதலமைச்சரானதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணாவின் பெயரைச் சூட்டினார்.

பெயர் நீக்கம்

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின் சம்புவரையர் பெயரில் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இப்படி பல தலைவர்களின் பெயர்களில் தமிழ்நாடு மாவட்டங்கள் இருந்தன. 1996 காலகட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.
தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. மேற்காணும் தாலுகாக்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்.

1966-ஆம் ஆண்டு முதல்…
1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம்;
1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம்;
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்;
1985: மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்;
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம்;
1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம்;
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்;
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்;
1993: தென்னார்க்காடு மாவட்டத்தைப் பிரித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்;
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள்;
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து தேனி மாவட்டம்;
1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து நாமக்கல் மாவட்டம்;
1997: செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்;
2004: தருமபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம்;
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து அரியலூர் மாவட்டம்;
2009: கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம்;
2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம்.
தனித்துவம்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறீவில்லிபுத்தூர், விருதுநகர் (விருதுபட்டி), சாத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. எத்தனை மாவட்டங்களாகப் பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, தண் பொருநைப் புனல்நாடு எனச் சேக்கிழாரும்,
பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி வரிகள் இந்த மாவட்டப் பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?

நாட்டின் விடுதலைக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது. 1967-ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனதும், சைதாப்பேட்டையில் இருந்த இந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாகத்துக்கு காஞ்சிபுரமும், வழக்கு மன்றத்துக்கு செங்கல்பட்டு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1997ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை இருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்பட்டன

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுகுன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை சேர்க்கப்பட்டன.

38 மாவட்டங்கள்

13 மாவட்டங்களாக இருந்து, இன்றைக்கு 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி மட்டும்தான் இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களாகும்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டமாக மலர்ந்தது, கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முசிறி தனி மாவட்டமாக வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்திலிருந்து மேச்சேரி தனி மாவட்டமாக வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நிர்வாக வசதி

மாவட்டங்கள் பிரிப்பு என்பது விரைவான நிர்வாக பலாபலன்கள் பெறுவதற்கும், திட்டங்களுடைய பயன்கள் உடனே மக்களைச் சென்றடைவதற்கும் பயன்பட வேண்டும்.
இன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, எல்லாப் பகுதிகளுக்கும் விரைந்து செல்வதற்கு சாலை, வாகன வசதிகள் இருந்தும்கூட மக்கள் நலப் பணிகளை நேரடியாக கண்காணிக்கச் செல்வதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முனைவதில்லை. ஏதாவது திட்டம் சரியில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் அன்றைய முதலமைச்சர்களிடமே சொல்லக்கூடிய துணிவு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்தது.
சிறிய மாவட்டங்கள் அமைவதைப் போலவே, அரசியல் தலையீடு இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நிர்வாகமும் அமைந்துவிட்டால், வளர்ச்சியை அதிவிரைவாக உறுதிப்படுத்த முடியும்.


வியாழன், 24 அக்டோபர், 2024

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

 Published October 21, 2024

விடுதலை நாளேடு

நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் அனுமன் நதி, மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி தென்காசி மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு சாம்பவா் வடகரையைக் கடக்கும் இடத்தில் ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் படித்துறையில் 114 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு சிறீ என்ற எழுத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 1086 ஆவணி 1 ஆம் தேதி (17/08/1910) மலையாளப் புத்தாண்டு தொடங்கும் நாளில் பொறிக்கப்பட்டுள்ளது.
சங்கரலிங்கய்யா் பேரனும் சாமுவய்யா் மகனுமான ராமய்யா் என்பவா் இந்தப் படித்துறையைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகுந்த எழுத்துப் பிழைகளுடன் தமிழிலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அருகே இருப்பதால் மிகுந்த முக்கியத்துவவம் பெறுகிறது.

மதுரை அன்னியா் வசப்பட்டபின் தெற்கே தென்காசி சென்ற பிற்காலப் பாண்டியா்கள், அங்கிருந்து ஆட்சிபுரியத் தொடங்கினா். கி.பி.15 ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியா்களில் மிகவும் புகழ்பெற்றவரும் தீவிர சிவபக்தருமான பராக்கிரம பாண்டியன், சிவன்கோயில்கள் பல எடுப்பித்து அக்கோயில்களில் சிவபூஜை தடையின்றி தொடர சிவபிராமணா்களுக்கு அய்ந்து அகரங்கள்(அக்ரஹாரம்) அமைத்துக் கொடுத்தார் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கும் அவரது மெய்க்கீா்த்தியில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறு அவா் அமைத்துக் கொடுத்த ஒரு அகரம்தான் சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அகரம். இந்த அகரத்தைச் சோ்ந்த சிவபிராமணா்களின் வழிவந்தவரான ராமய்யா் என்பவா்தான் சென்ற நூற்றாண்டில் இந்தப் படித்துறையை அமைத்து கல்வெட்டு பொறித்தார் என்பது தெரிகிறது.
அகரத்தை (அக்ரஹாரத்தை) சோ்ந்த பார்ப்பனா்கள் மட்டும் நீராடுவதற்கு இந்த கிளை வாய்க்கால் படித்துறை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அனுமன் நதியில் பிற பொதுமக்கள் நீராடி இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் ‘தா்மோ ரக்ஷகக் கபிம்’ என்று கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த தா்மத்தை அனுமன் காப்பார் என்பதாகும் என்றனா்.

பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு

 


விடுதலை நாளேடு

திருவள்ளூர், அக். 21- திருவள்ளூர் அருகே மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் சிறீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ளது.

இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், சிறீசிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.
அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக் கப்பட்ட இரு செப்பேடுகள் கண் டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த செப்பெடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந் ததால், அதன் ஒளிப்படங்களை கருநாடகா மாநிலம்- மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, செப்பேடுகளின் ஒளிப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம், ‘‘சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பார்ப்பனர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக மாநில தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

 Published February 16, 202, விடுதலை நாளேடு

பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது.
பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர் கள் தங்கம், ராஜேஸ்வரி தலை மையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழை மையான தடுப்பணை கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக் கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந் தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதி யில் உற்பத்தியாகி, காட்டாறாக சில கி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற் றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட் டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணை யின் சிதைந்துபோன இடிபாடு களில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடு கிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக் குளத்திலும் கலப்பதால் அப் பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்து கிறது.

ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம் இந்த தடுப்பணையில் அமைக்கப் பட்ட மதகுகள் மூலம் 3 குளங் களையும் நிரப்பிவிட்டு, இறு தியாக சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட் டாற்று வெள்ளம் தடுப்பணை யையும், மதகுகளையும் உடைத் தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்த மானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண் டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10ஆம் நூற் றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப் பணை கி.பி.10ஆம் நூற்றாண் டில் கட் டப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள் ளது. பூச்சு விலகாமல் இருக்க வும், கரையின் மேற்புறப் பிடி மானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென் படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 30 மே, 2023

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

 

 7

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. 

தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபு களை பாதுகாத்து வந்துள்ளனர்.

ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள் ளது. ஓலை யில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத் தாலான எழுத் தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச் சுவடிகள் பாது காப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் சுவடியியல் துறைப் பேராசிரியரு மான சு.தாமரைப் பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டு பிடித்துள்ளார்.  

மதுரையில் சிவக்குமார், திருநெல் வேலியில் ராமலிங்கம், கன்னியா குமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச் சுவடிகளைத் தேடும் போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:

தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந் துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில் நுட்பக் கருவி யான எழுத்தாணிகளையும் பாது காப்பது அவசியம். அகநானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, பெருங் கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல் களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப் படுகின்றன.

மந்திர ஓலை, சபையோலை, அறை யோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன் னோலை, படியோலை என்று அழைக் கப்பட்டன. ஓலை களைப் பாதுகாக் கும் இடம் ஆவணக் களரி என்றழைக் கப்பட்டது. 

எழுத்தாணியால் ஓலையில் எழு துவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத் தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன.

பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத் தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், பெருங் கதையில் குறிப்பிடும் வெட் டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. 

ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக் குவதுபோல் மரபு தொழில் நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப் பதும் அவசியம் என்றார்.

எழுத்தாணி வகைகள்: 

குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத் துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண் டைப் பகுதி கனமாகவும் குண் டாகவும், முனைப் பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப் படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணியை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப் பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரி கள்வரை எழுதலாம். வாரெழுத் தாணிய£னது சற்று நீளமாக இருக்கும். 

கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மை யாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது. மடக் கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறு முனையில் கூராகவும் உள் ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக் கெழுத்தாணி என்றானது.

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

 4

தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி,  தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:

தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில் நீர் வற்றியதை அடுத்து குளத்தில் இருக்கும் மதகுக்கு அருகே குளத்தின் உள்ளே ஒரு தூம்பு  இருப்பதும் அதில் ஒரு வட்டெழுத்து  கல் வெட்டு இருப்பதும் கண்டறியப் பட்டது.  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி,  தென்பொதிகை குடும்பன்,  பி. கே. கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் உதவியோடு ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து நாராயணமூர்த்தி மற்றும் குழுவினர் கூறுகையில்,  புதிதாக தூம்பில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து  கல்வெட்டு பொது ஆண்டிற்குப் பின் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது.  

பாண்டிய பேரரசர் மூன்றாம் ராஜ சிம்ம பாண்டியரின் 14ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 914இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தென் வார நாட்டுக் கிழவன் அமைத்துக் கொடுத் ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 

மொத்தம் 18 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட் டுள்ளது. பொதுவாக வேளாண் மைக்காக ஏரி குளங்கள் வெட்டு வதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு  அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் வெட் டுவதும் பண்டைய தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த பழக்கம். 

இதையொட்டி தாம் அமைத்துக் கொடுத்த மதகு கால் தூம்பில் எட்டி மாறன்  என்பவர் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்.

எட்டிமாறன் அமைத்த தூம்பில் இருந்து குளக்கரை மதகு 75 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 75 சென்டி மீட்டர் இடைவெளி உள்ள குமிழி தூண்கள் இரண்டும் அய்ந்து அடி அகலம் கொண்ட மதகு காலும்,  கரை மதகை இணைக்கின்றன.  

19ஜ்13ஜ்3.5 சென்டிமீட்டர் அளவு கொண்ட சுட்ட செங்கற்களால் தூம் பின் அடிப்பகுதியும் காலும் கட்டப் பட்டுள்ளன.

சுண்ணாம்புக் காரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மதகு காலும் தூம்பின் அடிப்பகுதியும் மிகுந்த பலத்துடன் எத்தகைய  வெள்ளத் தையும் பேரழிவையும் எதிர் கொள் ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று வரை பல வெள்ளங்களையும்,   இயற்கை மழை பேரிடர்களையும் சந்தித்த இத்த தூம்பும் காலும் சிதையாமல் இருப்பதில் இருந்தே தமிழர்களின் கட்டுமான அறிவியலை உணர முடிகிறது.

தூம்பை அமைத்த இந்த எட்டி மாறன் பற்றிய பிற செய்திகளை நாம் அறிய முடிய வில்லை.  எனினும் இவர் ராஜசிம்ம பாண்டியரின் தாத்தாவான சீமாறன்,  சீவல்லபன் ஆட்சிக் காலத் தில் பெரும் புகழோடு வாழ்ந்த அரசு அதிகாரியான எட்டிசாத்தன் என்ப வரின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

எட்டி சாத்தன் தென்பாண்டி நாட்டில் கிழவன் ஏரி என்ற பெயரில் பல ஏரிகளையும் குளங் களையும் அமைத்தவர் என்பது பல கல்வெட் டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

அதே போன்று இந்த கீழப்புலியூர் குளத்துக்கு தூம்பும்.  காலும் அமைத் தவர் எட்டி மாறன் என்ற தென் வார நாட்டுக் கிழவன் என்று கல்வெட்டு கூறுவதால் இவர்கள் வழி வழியாக தென் பாண்டி நாட்டில் வேளாண் மைக்காக குளங்கள் ஏரிகள் வெட்டியும் மதகு தூம்புகள் அமைத்து கொடுத்தும் வாழ்ந் தார்கள் என்று கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் குழுவினர் தெரிவித்தனர்.

திங்கள், 20 மார்ச், 2023

10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரை, செப்.20   திருச்சுழி அருகே 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. நீர்நிலைகளை வணிகர்கள் பேணிக் காத்த தகவல், இந்த கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கல்லூரி வரலாற் றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜ பாண்டி ஆகியோர், திருச்சுழி சுற்று வட்டாரத்தில் கள ஆய்வு செய்தனர். மூலக்கரைப்பட்டி என்னும் ஊரில், கண்மாய்க் கரையோரமாக கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

 மூலக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் 4 அடி உயர மும் ஒன்றரையடி அகலமும் கொண்ட ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தோம். அதன் மேற்புறம் 13 வரிகள், வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துகள் தென்பட்டன. இவற்றை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்ய செயலாளருமான சாந்தலிங்கத் தின் உதவியோடு படித்துப் பார்த்தோம். கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர் காலத்தை சேர்ந்தது என தெரிய வருகிறது.

இக்கல்வெட்டு இருந்த கண்மாய் கரையில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, அப்பகுதியைச் சேர்ந்த வணிக ரான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட் டுள்ளது. 

இதையடுத்து, வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவர், கற்களைக் கொண்டு உடைப்பு ஏற் பட்ட கரையை சீரமைத்து, அதில் இக் கல்வெட்டையும் வைத்துள்ளார் என தெரிய வருகிறது. நீரின் முக்கியத்து வத்தை அறிந்த, இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களும், நீர்நிலைகளை பேணி பாதுகாத் துள்ளனர் என்பதனை இதன் மூலம் அறியலாம். 

இவ்வாறு தெரிவித்தனர்


தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!

  படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்! விடுதலை நாளேடு Published February 15, 2025 தமிழ்நாட்டி...