திங்கள், 23 ஜனவரி, 2023

15,000 ஆண்டுகள் பழைமையான பூம்புகார்: ஆய்வுத்தகவல்


திருச்சி,ஜன.23- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.ராமசாமி கூறியிருப்பதாவது: 

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ரூ.10 கோடி நிதியுதவியுடன்,

கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு நடத்தும் பணி கடந்த 2019-2020 ஆண்டில் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த ஆய்வு, கரோனா பரவல் காரணமாக இடையில் தடைபட்டதால், 2024 மார்ச்சுக்குள் முடிக்கும் வகையில், மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக் களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போதைய கடற்கரையில் இருந்து 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய துறைமுக நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இது 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் 1-க்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே காவிரியும், அதன் கிளை நதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்கு களும், பெரிய நீர் வீழ்ச்சியும் கண்டறியப் பட்டுள்ளன.

இவை சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம் போன்ற வற்றால் இடம் மாறி வந்த இந்த 3 பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும். பருவநிலை மாற்றம் குறித்த அட்டவணைப்படி நடத்திய ஆய்வில், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை கடற்கரை நகரமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர், சீர்காழியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பும், நாங்கூரில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பும், காவிரிப் பூம்பட்டினத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பும் கடற்கரை நிலை கொண்டிருந்தது. தற்போது இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது என்றார். அப்போது, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாசன் ராகவன், தொலை உணர்வுத் துறை பேராசிரியர்கள் 

க.பழனிவேல், ஜெ.சரவணவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா


   அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது

      கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு. 3 ஆயிரத்து 100லும், ஆறாம் இடத்தில் உள்ள சீனாவில் கி.மு. 2 ஆயி ரத்து 70இலும் அரசுகள் உருவாகின.

    இந்தியாவில் கி.மு. 2 ஆயிரத்தில் முதன் முதலாக ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.

திங்கள், 9 ஜனவரி, 2023

மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு


மானாமதுரை,நவ.8- மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக் கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில சிற்பங்கள் கண்டடெடுக் கப்பட்டன. அவை ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சமண மத தீர்த் தங்கரரான மகாவீரர் சிற்பங்கள் என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இங்கு இரண்டு மகாவீரர் சிற்பங்கள் இருக்கின்றன. ஒரு சிற்பம் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது சமணர்களின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமாகும். சிற்பத்தின் அடிப்பகுதியில் மகாவீரருக்கே உரிய சிம்மம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் மூன்று சிம்மங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இந்த பகுதி முற்கால பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியாகும். இந்த பகுதியில் சமண சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது அக்கால மன்னர்கள் மத நல்லிணக்கத்தை பேணியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு சிற்பம் தலைப்பகுதி சிதைந்தும் அதற்கு மேல் உள்ள பகுதிகள் முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்திற்கு இடது வலது புறமாக இரண்டு சாமரதாரிகள் தலை இன்றி காணப்படுகிறார்கள். இந்த சிற்பத்தின் காலம் 9ஆம் நூற்றாண்டு ஆகும். பாண்டிய நாட்டில் சமண சமயம் மிக செழிப்பாக இருந்ததற்கு தொடர்ந்து கிடைத்துவரும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாகும். தற்போது இப்பகுதி மக்கள் புத்தர் சுவாமி என்று விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்’’ என்றனர்.


பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...