புதன், 27 டிசம்பர், 2017

பெரியார்70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்?

மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பேத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையின் வயது 30. இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை.

பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும், திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார்.
"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக் குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது." (28.6.1949 - விடுதலை) ஆக, மணியம்மையை சட்டப்படி வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு
மட்டுமே என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
"மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல ! ஆதனால் இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." (7.7. 1949 - விடுதலை) இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத் தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்பிடி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" - (16.7.1949 - குடி அரசு)
அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான
தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும்.

"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்.
2. பிள்ளைப் பேறு கருதி
3. தன் காம இச்சைக்கு உதவியாக

மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமணத்திற்கு  கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. " (9.7.1949 - விடுதலை)

நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அது தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்க இல்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுகாக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர்கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. பின்னர் ஒருநாள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 1967 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு
மணியம்மையாரின் தொண்டே காரணம் என்றார்.

மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி.
"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - (‘குயில்’ இதழ், 10.04.1960)

12) அனைவரையும் சுய மரியாதைத் திருமணம் செய்யச் சொன்ன பெரியார், மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்தது ஏன்?

மேலே சொன்னது போல பெரியார் - மணியம்மை திருமணமே ஒரு சட்டப் பாதுக்காப்பிற்குத்தான். 1967-ல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றப் பின்னரே அண்ணா சுய மரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். அதற்கு முன் வரை இந்துத் திருமணச் சட்டத்தின் படி சுய மரியாதைத் திருமணங்கள் செல்லாது. பெரியார் சட்டப்படி ஒரு வாரிசு அறிவிக்க வேண்டியதிருந்த காரணத்தால், ஞானம் அம்மையார் சாட்சிக் கையெழுத்துப் போட, பதிவாளர் முன்னிலையில் பார்ப்பனச் சடங்கு இன்றி மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

13) "உன் மனைவி வேறு ஒரு ஆண்மகனை விரும்பினால் அதைத் தடுக்காதே" என்று பெரியார் கூறினாரா?

🙂 இல்லை ! பெரியாரின் எழுத்தைச் சரியாக படிக்காமல் இடையே இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்துப் போட்டுப் பரப்பபடும் அவதூறு இது. 1971 சனவரி,பெரியார் சேலத்தில் மாநாடு நடத்துறார். மாநாட்டுத் தலைப்பு.

'மூட நம்பிக்கை ஒழிப்பு ','கற்பு'. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவில் இருக்கும் ‘‘மத உணர்ச்சியைப் புண்படுத்தும் சட்டத்தை எடுத்து விடவேண்டும்" என்பது முக்கியத் தீர்மானம். அது போலவே அரசுக்கு வேண்டுகோளாக பல தீர்மானங்கள் போடப்பட்டன. ஒரே ஒரு தீர்மானம் மட்டும் பொதுவான கருத்தாகச் சொல்லப்பட்டது. அந்தப் பொதுவான தீர்மானம் -> "ஒருவன் மனைவி என்பதனால் (அவனை விரும்பவில்லையானால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது". பலதார மணமும், இளம் வயதுத் திருமணமும் நிரம்ப இருந்த காலத்தில் பெண்ணின் விருப்பமில்லாத் திருமணத்தில் வாழ வேண்டியக் கட்டாயம் இல்லை என்பதற்காக இயற்றப்பட்டத் தீர்மானம் அது. உடனே பெரியார் "மற்றவன் மனைவியை கடத்திக் கொண்டு போவது தவறில்லை’ என்று தீர்மானம் போட்டதாகத் திரித்து 'தி இந்து', 'தினமணி' போன்றவை எழுதின. அதற்கு பெரியார் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்தார் பெரியார். அனால் அப்பத்திரிக்கைகள் பெரியார் அளித்த மறுப்பை வெளியிடவில்லை. பின் திராவிடர் கழகம் சார்பில் வழக்குப் போடப்பட்டது. இறுதியில் தி இந்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது.

நன்றி: telegra.ph/Periyar-FAQ---II-10-30
Thanks : MohanKumar Sey
- அருண்குமார் .எம், முகநூல் பதிவு, 26.12.17

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!



புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

சில நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை காது, மூக்கு வைத்து, கற்பனையாகப் பலவற்றைப் புனைந்து புராணக் கதைகளாக்குகின்றனர்.

இரணியன் பிரகலாதன் கதை. நாத்திகத் தந்தைக்கும் ஆத்திக மகனுக்குமான போராட்டத்தின் கற்பனை விரிவாக்கம்.

சிறுத்தொண்டன் தன் பிள்ளையை அறுத்துச் சமைத்து சாமியாருக்குப் போட்டது உண்மை நிகழ்வு. வடநாட்டுச் சாமியார்கள் அக்காலத்தில் நரமாமிசம் சாப்பிட்டவர்கள். அப்படியொரு சாமியாருக்கு மனிதக் கறி படைக்கவே சிறுத்தொண்டர் தன் மகனை அறுத்துச் சமைத்தான். 

பக்தி வெறியில், பக்தி தீவிரத்தில் தன் மனைவியைக் கேட்ட சாமியாருடன் மனைவியையே அனுப்பிவைத்தவன்தான் இயற்பகை நாயனார். சமைக்கப்பட்ட சிறுத்தொண்டனின் பிள்ளையை சாமியார் மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார் என்பதெல்லாம் ஜோடனைப் புனைவுகள்!

அந்த வகையில் மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் கதைகளின் உள் ஒடுங்கியுள்ள மய்யக் கரு வரலாற்று நிகழ்வினைக் குறிப்பதாகும்.

மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் போன்றவர்கள் திராவிட இனத்தின் மன்னர்கள். இந்த மண்ணின் உரிமையாளர்கள்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். அவர்களுக்கென்று உரிமையான நிலம் எதுவும் இல்லை.

ஒண்ட வந்த ஆரியர்கள் நிலம் கேட்டு தொல்லை தர, தர முடியாதென்று நம் இனத் தலைவர்கள் மறுக்க, அதன் வழி எழுந்த சிக்கல் கதைதான் புராணங்களாக புனையப்பட்டன.

மாவலி கதையிலும், நரகாசுரன் கதையிலும் நிலம் சார்ந்த சிக்கலே, அடித்தளமான கருப்பொருள் என்பதை உய்த்தறிந்து உணர்ந்துகொண்டால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்ல, மாவலியும் நரகாசுரனும் ஒரே தலைமுறையில் வந்தவர்கள் என்ற செய்தி  புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பொருத்திப் பார்த்தால், இருவரும் திராவிடத் தலைவர்கள் என்ற உண்மை எளிதில் புலப்படும்.

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் என்பதுதான் புராணங்களில் இடம்பெறும் போர்ச் செய்திகள் எல்லாம்.

அப்படியென்றால் என்ன பொருள்? தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

“சுத்தம்’’ _ அதன் எதிர்ச்சொல் அசுத்தம்.

சுரர் என்றால் தேவர் _ சுரபானம் குடித்த ஆரியர்கள்.

அசுரர் என்றால் சுரர் அல்லாதவர். அதாவது திராவிடர்கள் (தமிழர்கள்) என்பதுதானே அதன் உண்மை.
தமிழர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட மாபெரும் நிலப்பரப்பிற்கு உரிமையானவர்கள். வேறு எந்த இனமும் கலக்காத நிலையில் தனிமையாய் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், நகரவாழ்வு, கட்டுமானம், மருத்துவத்திறன் என்று பல வகைகளிலும் சிறந்து வாழ்ந்தவர்கள்.

சிந்து, நைல், காவிரி என்று நதிக்கரை நாகரிகம் எல்லாம் தமிழர் திராவிடர் நாகரிகங்களே!

இப்படி வாழ்ந்த தமிழரின் பரந்த நிலத்தில் முதலில் ஆரியர்கள்தான் பிழைப்புக்காக உள் நுழைந்தனர். அவ்வாறு தமிழர்ப் பகுதிக்குள் (இந்தியாவுக்குள்) நுழைந்த அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லாததால், வருவாய் இல்லாததால், தமிழர்களிடம் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர்.

அவ்வாறு அவர்கள் பிச்சை எடுத்தபோது தங்களை, “பரதேசி’’ (அயல்நாட்டார்) என்று அழைத்துக்கொண்டனர். அந்தப் பெயரே பிச்சைக்காரர்களைக் குறிப்பதாய் பின்னாளில் ஆயிற்று.
ஆக, பிச்சையெடுத்து பிழைத்த ஆரியர்கள், நாளடைவில் தமிழர் மண்ணை சிறிது சிறிதாய் தானமாக, இனாமாக, பிச்சையாகப் பெற்றனர்.

அன்றைய சூழலில் பரந்த நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை. எனவே, நிலம் ஏராளமாய் இருந்ததால், ஆரியர், தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு ஆரியர் கைப்பற்றிய இடங்களில் அவர்கள் குழுக்களாய் வாழ்ந்தனர். மேலும் மேலும் ஆரியர்கள் தமிழர் நிலத்தில் நுழைவது தொடர்ந்தது.

ஆரியர் நுழைவு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவதும் தொடர்ந்தது. அதன் விளைவாய் ஆரியக் குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க, அவர்களின் எண்ணிக்கையும்கூட, அவர்கள் இந்தியாவெங்கும் பரவினர்.

இப்படிப்பட்ட பரவல் அதிகரிக்க அதிகரிக்க, அதைத் தமிழர்கள் தடுத்தனர். ஆரியர் அபகரித்த நிலப் பகுதியையும் மீட்க முயன்றனர். இதன் விளைவாய் ஆரியர் திராவிடர் போர் தொடர்கதையானது!

இரண்யாட்சதன், மாவலியின் கதையை ஆய்வு செய்தாலும், நரகாசுரன் கதைகளைக் கூர்ந்து நோக்கினும், சூரபதுமன் கதையை நுணுகி நோக்கினாலும், நிலத்தை தமிழர்கள் தரமறுக்க, ஆரியர் அபகரிக்க முயலும் நிகழ்வுகளே உள்ளடக்கமாய் இருப்பதை எளிதில் அறியலாம்.

மாவலியின் கதை என்ன?

“மாவலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். அசுர குலத்தின் வாரிசான மாவலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மாவலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் வெற்றிபெறவே, தேவர் குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டது. 

அசுர குலத்தவனான மாவலி, தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும்  சிறந்தவனாக விளங்கினான். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த வாமனன் (பார்ப்பனன்), மாவலியின் அரண்மனைக்குச் சென்று, தாம் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டான். வந்திருப்பது சூழ்ச்சிக்கார வாமனன் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மாவலியைத் தடுத்தார்.

தம்மிடம் கையேந்தி நிற்பவர்க்கு உதவ எண்ணிய மாவலி மன்னன், குரு சொன்னதைக் கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார்.

உடனே, திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மாவலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்தச் சமயத்தில் மாவலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார் என்கிறது புராணம்.

மேற்கண்ட கதையை கூர்ந்தாய்வு செய்தால், மாவலி மன்னன் (தமிழ் மன்னன்) தன் திறத்தால் பெரும் நிலப் பகுதியை ஆண்டவன் என்பது தெளிவாகிறது. மாவலி என்றாலே மிக வலிமை உடையவன் என்பதே பொருள். ‘வலி’ என்றால் வலிமை என்று பொருள்.

மாவலி மன்னனுக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் இடையே மண்ணுரிமைப் போர் நடந்தது என்பதை இக்கதை பதிவு செய்துள்ளது. அப்போரில் மாவலியே வென்றுள்ளார் என்பதும் இக்கதை குறிப்பிடுகிறது.
வலிமையால் போரிட்டு வெல்ல முடியாத ஆரியப் பார்ப்பனக் கூட்டம், நிலத்தை பிச்சையாகப் பெற்று மாவலி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஊடுருவினர் என்பதே இக்கதையின் வழி அறியப்படும் செய்தியாகும்!
பிச்சை பெற்றதை மறைத்து பெருமையாகக் காட்ட வாமன அவதாரக் கதையைப் புனைந்தனர்.

மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தான். ஒருஅடியில் மண் உலகம் முழுவதும் அளந்துவிட்டார். இரண்டாம் அடியில் விண்ணுலகத்தை அளந்துவிட்டார். மூன்றாம் அடி எங்கு வைக்க என்றதும் மாவலி தன் தலையைக் காட்ட, அதில்வைத்து அவனை அழித்தார் என்பது ஆரியப் பித்தலாட்ட புனைவு.

ஒரு அடியில் மண் உலகத்தை அளந்துவிட்டார் என்றால் மண் உலகில் உள்ள அனைத்தும் மாவலி உட்பட வாமனனுக்கு உரிமையாகி விட்டது என்று பொருள். அப்படியானால், முன்னமே வாமனனுக்கு உரிமையாகிவிட்ட மாவலியின் தலையில் மூன்றாம் அடி அளந்ததாய்ச் சொல்வது பித்தலாட்டம் அல்லவா? ஒன்றையே இருமுறை அளப்பது மோசடி அல்லவா?

எனவே, மண், விண் அளந்து பின் மூன்றாமடி மாவலி தலைமீது என்பது ஆரியப் பித்தலாட்டப் புனைவு.
உண்மை என்னவென்றால், நிலமற்ற சிறு ஆரியக் கூட்டம் மாவலியிடம் நிலத்தைத் தானம் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டது என்பதே ஆகும்.  

ஆரிய சிறுகூட்டம் என்பதன் உருவகம்தான் வாமன அவதாரம் என்பது. அதுவும் மாவலியின் அமைச்சர் ஆரியக் கூட்டத்திற்கு நிலத்தைத் தானம் கொடுக்கக் கூடாது என்று தடுக்கிறார். அதையும் மீறி, மாவலி ஆரியக் கூட்டத்திற்கு பிச்சையாக நிலத்தைக் கொடுத்தான். அப்போது மாவலியின் அமைச்சர், என் பேச்சைக் கேட்காத நீ எல்லாவற்றையும் இழக்கப் போகிறாய் என்று எச்சரித்தார்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காது மாவலி ஆரியர்களை தன் ஆளுகைப் பகுதியில் விட்டதால், ஆரியர்கள் மேலும் மேலும் நுழைந்து நிலத்தைக் கைப்பற்றியதோடு, தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கினர். இறுதியில் தமிழ் மொழியோடு ஆரியம் அதிகம் கலந்து மலையாளம் என்ற ஒரு புது மொழியும் வந்து, மொழியும் கெட்டது.

எனவே, ஆரியர்கள் திராவிடர்களிடம் நிலத்தைப் பிச்சை பெற்றே தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர் என்பதும், தமிழர்களிடம் ஆரியர்கள் போரிட்டுத் தோற்றனர் என்பதும் இக்கதையின் வழி நாம் உறுதியாய் அறிய முடிகிறது.

வாமன அவதாரக் கதையில் குறிப்பிடப்படும் சில செய்திகளும் இதை உறுதி செய்கின்றன.

வாமனன் மாவலியிடம் நிலம் பிச்சையாகப் பெற்றபோது அங்கு வந்த பிரம்மன், “மாவலி தூய உள்ளத்துடன் தானம் (பிச்சை) செய்திருப்பதால் அவன் தண்டிக்கத்தக்கவனல்ல. பெருமைக்குரியவன்’’ என்கிறான்.

வாமனனாக வந்த திருமால், “மாவலி, மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன்’’ என்று பாராட்டுவதாய் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர்தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தர்மருடன் மலைநாட்டுக்குச் சென்றார். அந்த நாட்டை மாவலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.

அவர்கள் மாவலியின் அரசவைக்குச் சென்றனர். கண்ணபிரான் தர்மரை மாவலியிடம் அறிமுகப்படுத்தி, “இவர்தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்’’ என்றார்.

மாவலி, தர்மரின் முகத்தில்கூட விழிக்கவில்லை. “கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே “பிச்சை’’ என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் “தர்மம்’’ என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே, அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறேன்’’ என்றார்.

“தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா’’ என்ற கதையும் மாவலியின் சிறப்பைச் செப்பி நிற்கின்றது.

ஆக, மாவலியின் வரலாறு என்பது, ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியரை வீழ்த்தி, மண்ணுரிமையைக் காத்தவன் மாவலி. பிச்சையாகக் கேட்டதால் ஆரியர்களுக்கு சிறு நிலத்தை அளித்து உதவினான் என்பதே ஆகும்.

மாறாக, மாவலியை ஆரியம் அழித்ததாகவும், தான் அழிந்த நாளைக் கொண்டாட மாவலி வேண்டியதாயும் கூறுவது மோசடிப் பிரச்சாரம்.

அழிந்தவனை யார் கொண்டாடுவார்கள்?

ஆரியருக்கு எதிராகப் போரிட்டு, ஆரியர்களை வீழ்த்திய தமிழ் மன்னன் மாவலி என்பதாலே, அவன் இறந்த நாளை (திருவோணம்) ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் சரியான வரலாறு. 19ஆம் நூற்றாண்டில் மகராஷ்டிரத்தில் ஜோதிபா பூலே - மாவலி திரும்பி வந்ததை ‘வசந்த விழா’வாகக் கொண்டாடினார் என்று புதிய திருவிழா உருவாக்கப்பட்டது.

இன்றைய கேரளம் பண்டைய சேர நாடு. தமிழ் மன்னன் சேரன் ஆண்டது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ மண். ஆக, தமிழரும், தமிழ் மண்ணுமே பிற்காலத்தில் மலையாளிகளாகவும், கேரளாவாகவும் மாற்றம் பெற்றது உண்மை வரலாறு.

அடுத்து நரகாசுரன் கதை:

நரகாசுரன் என்ற பெயரே ஆரியருக்கு எதிரான திராவிட மன்னன் அவன் என்பதை உறுதிசெய்கிறது.
நரன் என்றால் மனிதன். மனிதக் கறியை நர மாமிசம் என்பது வழக்கு. அதன்வழி நோக்கின் இதன் பொருள் புலப்படும்.

ஆரியர்கள் திராவிடர்களை மனிதர்களாகவும், தங்களைத் தேவர்களாகவும் குறிப்பிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் தமிழ் மன்னன் ‘நரகன்’ என்று அழைக்கப்பட்டான்.

நரகன் ஆட்சிக்காலம் (கி.மு.2200 முதல் கி.மு.1389) என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

காமரூபம் என்ற பகுதியை ஆண்ட திராவிட மன்னன் நரகன் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பழைய அரச பாரம்பரிய மன்னன் நரகன். அஸ்ஸாம், வங்காளம் போன்ற பகுதிகள் தமிழர்கள் பரவி பெருமளவில் வாழ்ந்தனர் என்பது அகழாய்வின் மூலம் அறியப்படும் உண்மை. அஸ்ஸாமில், “தமிழ்ப்பூர்’’ என்று ஓர் ஊர், ராங்கிய மாவட்டத்தில் இன்றும் இருப்பதே இந்த உண்மையை உறுதி செய்கிறது.

“நரகாசுராகாவ்’’, “நகாசுர கிராமம்’’, “நரகாசுரபஹாட்’’, “நரகாசுர மலை’’ போன்றவை இன்றும் இருப்பது நரகனின் ஆட்சியை உறுதி செய்கிறது.

மண்ணின் மைந்தர்கள் என்பதுதான் பூமிபுத்திரன் என்று திரிக்கப்பட்டு, பூமிக்குப் பிறந்தவன் என்று கதைக்கப்பட்டது.

ஆரியர்கள் வந்தேறிகள். தமிழர்கள் மண்ணிற்கு உரியவர்கள் என்பதுதான் இது உணர்த்தும் உண்மை.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டிக் கொண்டான். அதை விஷ்ணு மீட்டான் என்ற புராணக் கதையின் உட்பொருளை ஊன்றி நோக்கினால், அது உணர்த்தும் உண்மையை அறிய முடியும். பூமியைப் பாயாய் சுருட்டினான் என்றால் என்ன பொருள்?

தனக்கு உரிமையான மண்ணை ஆரியர்கள் அபகரிப்பதற்கு எதிராய் இரண்யாட்சதன் செயல்பட்டான் என்பதே அதன் பொருள்.

அவன் மகன் நரகாசூரன் அதேபோல், ஆரியர்களுக்கு எதிராய் தனது மண்ணுரிமையைப் பாதுகாத்தான் என்பதையே அவன் கதைச் சொல்கிறது-

நரகாசுரன் தேவர்களை எதிர்க்கிறான். தேவர்களின் குமாரர்களைச் சிறை வைத்தான். எனவே அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்ட, விஷ்ணு நரகாசுரனை அழித்தார் என்கிறது புராணம்.

தேவர்கள் யார்? ஆரியர்கள்தான் தங்களை அப்படி அழைத்துக் கொண்டார்கள் என்று முன்னமே கண்டோம். தேவர்களை எதிர்க்கிறான் என்றால் ஆரியர்கள் ஊடுருவலை எதிர்க்கிறான் என்பது பொருள். தேவர் குமாரர்களை சிறை வைத்தான் என்றால், தமிழர் மண்ணை அபகரிக்கும் ஆரிய இளைஞர்களைத் தண்டித்தான் என்பதே பொருள்.

ஆக, நரகாசுரன் என்பவன் தன் ஆளுகைக்கு உட்பட்ட தங்களின் மண்ணுரிமையைக் காக்க ஆரியர்களுக்கு எதிராகப் போரிட்டான் என்பதுதானே இவற்றின் பொருள்.

மாவலி, நரகாசூரன் மட்டுமல்ல எல்லா அசுரர்களும் தமிழர்கள். அவர்கள் ஆரிய ஊடுருவலை எதிர்த்து தங்களின் மண்ணைக் காத்த போராளிகள் என்பதே பொருள்.

அதை மாற்றி அசுரர்கள் கொடுமைக் காரர்கள் போல் சித்தரித்து அவர்களைக் கடவுள் அழித்ததாய்க் கதைகட்டி, நம் இனத் தலைவர்களின் அழிவை நாமே கொண்டாடும் படி சதி செய்துவிட்டனர்.

எனவே, திராவிடர்கள் _ தமிழர்கள், இந்த உண்மையை நன்றாக உணர்ந்து புராணக் கதைகளை நம்பி விழா கொண்டாடுவதை விட்டுவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளது போல, நம் மண்ணுரிமை காத்த அவர்களை சிறப்பிக்கும் விழாவாக நாம் அவற்றைக் கொண்டாட வேண்டும். இதுவே நம் இனத்தின் தலைவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். நம் இனப் பெருமை காத்து இழிவு அகற்றும் வழியுமாகும்.

   -மஞ்சை வசந்தன்


- உண்மை இதழ்,1-15.10.17

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...