செவ்வாய், 26 டிசம்பர், 2017

மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!



புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

சில நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை காது, மூக்கு வைத்து, கற்பனையாகப் பலவற்றைப் புனைந்து புராணக் கதைகளாக்குகின்றனர்.

இரணியன் பிரகலாதன் கதை. நாத்திகத் தந்தைக்கும் ஆத்திக மகனுக்குமான போராட்டத்தின் கற்பனை விரிவாக்கம்.

சிறுத்தொண்டன் தன் பிள்ளையை அறுத்துச் சமைத்து சாமியாருக்குப் போட்டது உண்மை நிகழ்வு. வடநாட்டுச் சாமியார்கள் அக்காலத்தில் நரமாமிசம் சாப்பிட்டவர்கள். அப்படியொரு சாமியாருக்கு மனிதக் கறி படைக்கவே சிறுத்தொண்டர் தன் மகனை அறுத்துச் சமைத்தான். 

பக்தி வெறியில், பக்தி தீவிரத்தில் தன் மனைவியைக் கேட்ட சாமியாருடன் மனைவியையே அனுப்பிவைத்தவன்தான் இயற்பகை நாயனார். சமைக்கப்பட்ட சிறுத்தொண்டனின் பிள்ளையை சாமியார் மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார் என்பதெல்லாம் ஜோடனைப் புனைவுகள்!

அந்த வகையில் மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் கதைகளின் உள் ஒடுங்கியுள்ள மய்யக் கரு வரலாற்று நிகழ்வினைக் குறிப்பதாகும்.

மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் போன்றவர்கள் திராவிட இனத்தின் மன்னர்கள். இந்த மண்ணின் உரிமையாளர்கள்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். அவர்களுக்கென்று உரிமையான நிலம் எதுவும் இல்லை.

ஒண்ட வந்த ஆரியர்கள் நிலம் கேட்டு தொல்லை தர, தர முடியாதென்று நம் இனத் தலைவர்கள் மறுக்க, அதன் வழி எழுந்த சிக்கல் கதைதான் புராணங்களாக புனையப்பட்டன.

மாவலி கதையிலும், நரகாசுரன் கதையிலும் நிலம் சார்ந்த சிக்கலே, அடித்தளமான கருப்பொருள் என்பதை உய்த்தறிந்து உணர்ந்துகொண்டால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்ல, மாவலியும் நரகாசுரனும் ஒரே தலைமுறையில் வந்தவர்கள் என்ற செய்தி  புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பொருத்திப் பார்த்தால், இருவரும் திராவிடத் தலைவர்கள் என்ற உண்மை எளிதில் புலப்படும்.

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் என்பதுதான் புராணங்களில் இடம்பெறும் போர்ச் செய்திகள் எல்லாம்.

அப்படியென்றால் என்ன பொருள்? தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

“சுத்தம்’’ _ அதன் எதிர்ச்சொல் அசுத்தம்.

சுரர் என்றால் தேவர் _ சுரபானம் குடித்த ஆரியர்கள்.

அசுரர் என்றால் சுரர் அல்லாதவர். அதாவது திராவிடர்கள் (தமிழர்கள்) என்பதுதானே அதன் உண்மை.
தமிழர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட மாபெரும் நிலப்பரப்பிற்கு உரிமையானவர்கள். வேறு எந்த இனமும் கலக்காத நிலையில் தனிமையாய் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், நகரவாழ்வு, கட்டுமானம், மருத்துவத்திறன் என்று பல வகைகளிலும் சிறந்து வாழ்ந்தவர்கள்.

சிந்து, நைல், காவிரி என்று நதிக்கரை நாகரிகம் எல்லாம் தமிழர் திராவிடர் நாகரிகங்களே!

இப்படி வாழ்ந்த தமிழரின் பரந்த நிலத்தில் முதலில் ஆரியர்கள்தான் பிழைப்புக்காக உள் நுழைந்தனர். அவ்வாறு தமிழர்ப் பகுதிக்குள் (இந்தியாவுக்குள்) நுழைந்த அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லாததால், வருவாய் இல்லாததால், தமிழர்களிடம் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர்.

அவ்வாறு அவர்கள் பிச்சை எடுத்தபோது தங்களை, “பரதேசி’’ (அயல்நாட்டார்) என்று அழைத்துக்கொண்டனர். அந்தப் பெயரே பிச்சைக்காரர்களைக் குறிப்பதாய் பின்னாளில் ஆயிற்று.
ஆக, பிச்சையெடுத்து பிழைத்த ஆரியர்கள், நாளடைவில் தமிழர் மண்ணை சிறிது சிறிதாய் தானமாக, இனாமாக, பிச்சையாகப் பெற்றனர்.

அன்றைய சூழலில் பரந்த நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை. எனவே, நிலம் ஏராளமாய் இருந்ததால், ஆரியர், தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு ஆரியர் கைப்பற்றிய இடங்களில் அவர்கள் குழுக்களாய் வாழ்ந்தனர். மேலும் மேலும் ஆரியர்கள் தமிழர் நிலத்தில் நுழைவது தொடர்ந்தது.

ஆரியர் நுழைவு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவதும் தொடர்ந்தது. அதன் விளைவாய் ஆரியக் குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க, அவர்களின் எண்ணிக்கையும்கூட, அவர்கள் இந்தியாவெங்கும் பரவினர்.

இப்படிப்பட்ட பரவல் அதிகரிக்க அதிகரிக்க, அதைத் தமிழர்கள் தடுத்தனர். ஆரியர் அபகரித்த நிலப் பகுதியையும் மீட்க முயன்றனர். இதன் விளைவாய் ஆரியர் திராவிடர் போர் தொடர்கதையானது!

இரண்யாட்சதன், மாவலியின் கதையை ஆய்வு செய்தாலும், நரகாசுரன் கதைகளைக் கூர்ந்து நோக்கினும், சூரபதுமன் கதையை நுணுகி நோக்கினாலும், நிலத்தை தமிழர்கள் தரமறுக்க, ஆரியர் அபகரிக்க முயலும் நிகழ்வுகளே உள்ளடக்கமாய் இருப்பதை எளிதில் அறியலாம்.

மாவலியின் கதை என்ன?

“மாவலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். அசுர குலத்தின் வாரிசான மாவலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மாவலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் வெற்றிபெறவே, தேவர் குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டது. 

அசுர குலத்தவனான மாவலி, தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும்  சிறந்தவனாக விளங்கினான். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த வாமனன் (பார்ப்பனன்), மாவலியின் அரண்மனைக்குச் சென்று, தாம் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டான். வந்திருப்பது சூழ்ச்சிக்கார வாமனன் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மாவலியைத் தடுத்தார்.

தம்மிடம் கையேந்தி நிற்பவர்க்கு உதவ எண்ணிய மாவலி மன்னன், குரு சொன்னதைக் கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார்.

உடனே, திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மாவலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்தச் சமயத்தில் மாவலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார் என்கிறது புராணம்.

மேற்கண்ட கதையை கூர்ந்தாய்வு செய்தால், மாவலி மன்னன் (தமிழ் மன்னன்) தன் திறத்தால் பெரும் நிலப் பகுதியை ஆண்டவன் என்பது தெளிவாகிறது. மாவலி என்றாலே மிக வலிமை உடையவன் என்பதே பொருள். ‘வலி’ என்றால் வலிமை என்று பொருள்.

மாவலி மன்னனுக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் இடையே மண்ணுரிமைப் போர் நடந்தது என்பதை இக்கதை பதிவு செய்துள்ளது. அப்போரில் மாவலியே வென்றுள்ளார் என்பதும் இக்கதை குறிப்பிடுகிறது.
வலிமையால் போரிட்டு வெல்ல முடியாத ஆரியப் பார்ப்பனக் கூட்டம், நிலத்தை பிச்சையாகப் பெற்று மாவலி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஊடுருவினர் என்பதே இக்கதையின் வழி அறியப்படும் செய்தியாகும்!
பிச்சை பெற்றதை மறைத்து பெருமையாகக் காட்ட வாமன அவதாரக் கதையைப் புனைந்தனர்.

மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தான். ஒருஅடியில் மண் உலகம் முழுவதும் அளந்துவிட்டார். இரண்டாம் அடியில் விண்ணுலகத்தை அளந்துவிட்டார். மூன்றாம் அடி எங்கு வைக்க என்றதும் மாவலி தன் தலையைக் காட்ட, அதில்வைத்து அவனை அழித்தார் என்பது ஆரியப் பித்தலாட்ட புனைவு.

ஒரு அடியில் மண் உலகத்தை அளந்துவிட்டார் என்றால் மண் உலகில் உள்ள அனைத்தும் மாவலி உட்பட வாமனனுக்கு உரிமையாகி விட்டது என்று பொருள். அப்படியானால், முன்னமே வாமனனுக்கு உரிமையாகிவிட்ட மாவலியின் தலையில் மூன்றாம் அடி அளந்ததாய்ச் சொல்வது பித்தலாட்டம் அல்லவா? ஒன்றையே இருமுறை அளப்பது மோசடி அல்லவா?

எனவே, மண், விண் அளந்து பின் மூன்றாமடி மாவலி தலைமீது என்பது ஆரியப் பித்தலாட்டப் புனைவு.
உண்மை என்னவென்றால், நிலமற்ற சிறு ஆரியக் கூட்டம் மாவலியிடம் நிலத்தைத் தானம் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டது என்பதே ஆகும்.  

ஆரிய சிறுகூட்டம் என்பதன் உருவகம்தான் வாமன அவதாரம் என்பது. அதுவும் மாவலியின் அமைச்சர் ஆரியக் கூட்டத்திற்கு நிலத்தைத் தானம் கொடுக்கக் கூடாது என்று தடுக்கிறார். அதையும் மீறி, மாவலி ஆரியக் கூட்டத்திற்கு பிச்சையாக நிலத்தைக் கொடுத்தான். அப்போது மாவலியின் அமைச்சர், என் பேச்சைக் கேட்காத நீ எல்லாவற்றையும் இழக்கப் போகிறாய் என்று எச்சரித்தார்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காது மாவலி ஆரியர்களை தன் ஆளுகைப் பகுதியில் விட்டதால், ஆரியர்கள் மேலும் மேலும் நுழைந்து நிலத்தைக் கைப்பற்றியதோடு, தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கினர். இறுதியில் தமிழ் மொழியோடு ஆரியம் அதிகம் கலந்து மலையாளம் என்ற ஒரு புது மொழியும் வந்து, மொழியும் கெட்டது.

எனவே, ஆரியர்கள் திராவிடர்களிடம் நிலத்தைப் பிச்சை பெற்றே தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர் என்பதும், தமிழர்களிடம் ஆரியர்கள் போரிட்டுத் தோற்றனர் என்பதும் இக்கதையின் வழி நாம் உறுதியாய் அறிய முடிகிறது.

வாமன அவதாரக் கதையில் குறிப்பிடப்படும் சில செய்திகளும் இதை உறுதி செய்கின்றன.

வாமனன் மாவலியிடம் நிலம் பிச்சையாகப் பெற்றபோது அங்கு வந்த பிரம்மன், “மாவலி தூய உள்ளத்துடன் தானம் (பிச்சை) செய்திருப்பதால் அவன் தண்டிக்கத்தக்கவனல்ல. பெருமைக்குரியவன்’’ என்கிறான்.

வாமனனாக வந்த திருமால், “மாவலி, மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன்’’ என்று பாராட்டுவதாய் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர்தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தர்மருடன் மலைநாட்டுக்குச் சென்றார். அந்த நாட்டை மாவலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.

அவர்கள் மாவலியின் அரசவைக்குச் சென்றனர். கண்ணபிரான் தர்மரை மாவலியிடம் அறிமுகப்படுத்தி, “இவர்தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்’’ என்றார்.

மாவலி, தர்மரின் முகத்தில்கூட விழிக்கவில்லை. “கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே “பிச்சை’’ என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் “தர்மம்’’ என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே, அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறேன்’’ என்றார்.

“தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா’’ என்ற கதையும் மாவலியின் சிறப்பைச் செப்பி நிற்கின்றது.

ஆக, மாவலியின் வரலாறு என்பது, ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியரை வீழ்த்தி, மண்ணுரிமையைக் காத்தவன் மாவலி. பிச்சையாகக் கேட்டதால் ஆரியர்களுக்கு சிறு நிலத்தை அளித்து உதவினான் என்பதே ஆகும்.

மாறாக, மாவலியை ஆரியம் அழித்ததாகவும், தான் அழிந்த நாளைக் கொண்டாட மாவலி வேண்டியதாயும் கூறுவது மோசடிப் பிரச்சாரம்.

அழிந்தவனை யார் கொண்டாடுவார்கள்?

ஆரியருக்கு எதிராகப் போரிட்டு, ஆரியர்களை வீழ்த்திய தமிழ் மன்னன் மாவலி என்பதாலே, அவன் இறந்த நாளை (திருவோணம்) ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் சரியான வரலாறு. 19ஆம் நூற்றாண்டில் மகராஷ்டிரத்தில் ஜோதிபா பூலே - மாவலி திரும்பி வந்ததை ‘வசந்த விழா’வாகக் கொண்டாடினார் என்று புதிய திருவிழா உருவாக்கப்பட்டது.

இன்றைய கேரளம் பண்டைய சேர நாடு. தமிழ் மன்னன் சேரன் ஆண்டது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ மண். ஆக, தமிழரும், தமிழ் மண்ணுமே பிற்காலத்தில் மலையாளிகளாகவும், கேரளாவாகவும் மாற்றம் பெற்றது உண்மை வரலாறு.

அடுத்து நரகாசுரன் கதை:

நரகாசுரன் என்ற பெயரே ஆரியருக்கு எதிரான திராவிட மன்னன் அவன் என்பதை உறுதிசெய்கிறது.
நரன் என்றால் மனிதன். மனிதக் கறியை நர மாமிசம் என்பது வழக்கு. அதன்வழி நோக்கின் இதன் பொருள் புலப்படும்.

ஆரியர்கள் திராவிடர்களை மனிதர்களாகவும், தங்களைத் தேவர்களாகவும் குறிப்பிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் தமிழ் மன்னன் ‘நரகன்’ என்று அழைக்கப்பட்டான்.

நரகன் ஆட்சிக்காலம் (கி.மு.2200 முதல் கி.மு.1389) என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

காமரூபம் என்ற பகுதியை ஆண்ட திராவிட மன்னன் நரகன் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பழைய அரச பாரம்பரிய மன்னன் நரகன். அஸ்ஸாம், வங்காளம் போன்ற பகுதிகள் தமிழர்கள் பரவி பெருமளவில் வாழ்ந்தனர் என்பது அகழாய்வின் மூலம் அறியப்படும் உண்மை. அஸ்ஸாமில், “தமிழ்ப்பூர்’’ என்று ஓர் ஊர், ராங்கிய மாவட்டத்தில் இன்றும் இருப்பதே இந்த உண்மையை உறுதி செய்கிறது.

“நரகாசுராகாவ்’’, “நகாசுர கிராமம்’’, “நரகாசுரபஹாட்’’, “நரகாசுர மலை’’ போன்றவை இன்றும் இருப்பது நரகனின் ஆட்சியை உறுதி செய்கிறது.

மண்ணின் மைந்தர்கள் என்பதுதான் பூமிபுத்திரன் என்று திரிக்கப்பட்டு, பூமிக்குப் பிறந்தவன் என்று கதைக்கப்பட்டது.

ஆரியர்கள் வந்தேறிகள். தமிழர்கள் மண்ணிற்கு உரியவர்கள் என்பதுதான் இது உணர்த்தும் உண்மை.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டிக் கொண்டான். அதை விஷ்ணு மீட்டான் என்ற புராணக் கதையின் உட்பொருளை ஊன்றி நோக்கினால், அது உணர்த்தும் உண்மையை அறிய முடியும். பூமியைப் பாயாய் சுருட்டினான் என்றால் என்ன பொருள்?

தனக்கு உரிமையான மண்ணை ஆரியர்கள் அபகரிப்பதற்கு எதிராய் இரண்யாட்சதன் செயல்பட்டான் என்பதே அதன் பொருள்.

அவன் மகன் நரகாசூரன் அதேபோல், ஆரியர்களுக்கு எதிராய் தனது மண்ணுரிமையைப் பாதுகாத்தான் என்பதையே அவன் கதைச் சொல்கிறது-

நரகாசுரன் தேவர்களை எதிர்க்கிறான். தேவர்களின் குமாரர்களைச் சிறை வைத்தான். எனவே அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்ட, விஷ்ணு நரகாசுரனை அழித்தார் என்கிறது புராணம்.

தேவர்கள் யார்? ஆரியர்கள்தான் தங்களை அப்படி அழைத்துக் கொண்டார்கள் என்று முன்னமே கண்டோம். தேவர்களை எதிர்க்கிறான் என்றால் ஆரியர்கள் ஊடுருவலை எதிர்க்கிறான் என்பது பொருள். தேவர் குமாரர்களை சிறை வைத்தான் என்றால், தமிழர் மண்ணை அபகரிக்கும் ஆரிய இளைஞர்களைத் தண்டித்தான் என்பதே பொருள்.

ஆக, நரகாசுரன் என்பவன் தன் ஆளுகைக்கு உட்பட்ட தங்களின் மண்ணுரிமையைக் காக்க ஆரியர்களுக்கு எதிராகப் போரிட்டான் என்பதுதானே இவற்றின் பொருள்.

மாவலி, நரகாசூரன் மட்டுமல்ல எல்லா அசுரர்களும் தமிழர்கள். அவர்கள் ஆரிய ஊடுருவலை எதிர்த்து தங்களின் மண்ணைக் காத்த போராளிகள் என்பதே பொருள்.

அதை மாற்றி அசுரர்கள் கொடுமைக் காரர்கள் போல் சித்தரித்து அவர்களைக் கடவுள் அழித்ததாய்க் கதைகட்டி, நம் இனத் தலைவர்களின் அழிவை நாமே கொண்டாடும் படி சதி செய்துவிட்டனர்.

எனவே, திராவிடர்கள் _ தமிழர்கள், இந்த உண்மையை நன்றாக உணர்ந்து புராணக் கதைகளை நம்பி விழா கொண்டாடுவதை விட்டுவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளது போல, நம் மண்ணுரிமை காத்த அவர்களை சிறப்பிக்கும் விழாவாக நாம் அவற்றைக் கொண்டாட வேண்டும். இதுவே நம் இனத்தின் தலைவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். நம் இனப் பெருமை காத்து இழிவு அகற்றும் வழியுமாகும்.

   -மஞ்சை வசந்தன்


- உண்மை இதழ்,1-15.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...