சனி, 28 அக்டோபர், 2017

நாடார்கள் போராட்டம்


திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ் ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876 - 78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.

இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப்படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே தரிசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே

தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை இப்போதாவது நாடார்கள் உணருவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...