திங்கள், 2 டிசம்பர், 2019

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்-4

ஆய்வுக்கட்டுரை

தொல்லியல் ஆய்வாளர் ச.தீபிகா

 

சோழர் காலக் கல்வெட்டுகள்

உத்திரமேரூர் குடவோலை முறை

சொல்லும் கல்வெட்டு

 

ராஜ ராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதை கூறும் கல்வெட்டு

தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர் காலக் கல்வெட்டுகள் ஆகும். சோழர் காலத்தில் 200 முதல் 300 கற்கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் பல கல்வெட்டுகள்பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் வேதியர்களுக்கும், போர் வீரர்களுக்கும், கோயில்களுக்கும் மன்னர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்அளித்த கொடைகளைப் பற்றியே குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகளில் வரலாற்றுச் செய்திகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை மிகக் குறைவே.

முன்பு கூறியதைப் போல சோழர்காலக் கல்வெட்டு ஒவ்வொன்றும் மங்களச் சொற்களைக் கூறிக்கொண்டே துவங்குகின்றது, அடுத்து அம்மனுக்குரிய வம்சாவளி செய்திகள் விளக்கப்படுகின்றன. இச்செய்திகளில் புராணங்களும் இதிகாசங்களும் கலந்து இருப்பதை நாம் காணலாம். தமிழ்க் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திகளில் மன்னர்களின் வெற்றி நிகழ்வுகளை பொறிக்கத் தொடங்கியது ராஜராஜ சோழனின் காலத்தில்தான்!

சோழர் காலக் கல்வெட்டுகள் வேதியர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களைப் பற்றிய செய்திகளை துல்லியமாக விளக்குகின்றன. அக்கிராமங்களில் வசிக்கும் வேதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், அவர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்ட செய்தியும் கோயில்சுவர் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேசப்படுகிறது. சோழர் காலத்தில் இருந்த 1300 கிராமங்களில், சுமார் 250 கிராமங்கள் பிரம்மதேய கிராமங்களாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் நில அளவை குறித்து மிகத்துல்லியமாக அளவுகோல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், தஞ்சை பெரியகோயில் எவ்வாறு வடிவமைத்து, உருவாக்கப்பெற்றது என்ற செய்தி கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

பெரும்பாலான வெளிநாட்டுச் சான்றுகளே சோழர்களுடைய வெளியுறவு, வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துரைக்கின்றன. அதற்கு சான்றாக ராஜராஜசோழன், சீன சாங் பேரரசுடன் தன் வெளிநாட்டு உறவை மேன்மைப்படுத்திய செய்தியை சீன நாட்டில் உள்ள சாங் பேரரசின் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் தாய்லாந்தின் சைலேந்திரப் பேரரசு மன்னர்களால், நாகப்பட்டினத்தில் அமைக்கப்பெற்ற சூடாமணி பௌத்த விகாரையைசோழ மன்னர்கள் போற்றி வளர்த்தனர் என்ற செய்தியை தென்கிழக்காசிய வரலாற்று ஆவணங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. சோழர்களின் சிறப்புமிக்க தென்கிழக்காசிய படையெடுப்பைக் கூறும் கல்வெட்டுகள், அவர்கள் எவ்வாறு கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர், அதற்கான வழிமுறைகளும் விளக்கங்களும் என்ன என்பன போன்ற விவரங்கள் எந்த கல்வெட்டிலும் இல்லை.

பல கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் ராஜகேசரி, பரகேசரி போன்ற பட்டங்களைத் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான கல்வெட்டுகளில் இப்பட்டங்களே காணப்படுகின்றன; மன்னனின் பெயர்கள் வருவது குறைவே.

முதல் பராந்தகனின் (கி.பி.917) உத்திரமேரூர் கல்வெட்டு ஓர் அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது.  உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் சபை ஒன்று இயங்கி வந்துள்ளது. அச்சபைக்கான அங்கத்தினர்களைத் தேர்வு செய்ய குடவோலை முறை செயல்பட்டது என்று இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர், பல்லவர் காலத்திலேயே (கி.பி.750) 1200 வேத வைஷ்ணவ வேதியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆகும். எனவே இது உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இது ஒரு வேதியர் குடியிருப்பாக  திகழ்ந்திருக்கிறது.

தமிழகக் கல்வெட்டுகளில் வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் முக்கியமான ஒன்று கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டாகும். சுந்தர சோழனின் தலைமகனும், முதலாம் ராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டது குறித்து இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்றும், வீரநாராயணசதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த சிலர் இக்கொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும், மன்னனின் ஆணையின் பெயரில் அவர்களிடமிருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் நிலங்களும், அரசு உரிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் இக்கல்வெட்டில் இருந்து அறிகிறோம்.

அகழாய்வுகளில் கிடைக்கும் செய்திகளை மெய்ப்பிக்க சில சமயங்களில் கல்வெட்டுகள் மிகவும் உதவுகின்றன. சான்றாக உறையூரில்அகழ்வாராய்ச்சியில் கி.பி. 9-10 நூற்றாண்டில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இதை மெய்ப்பிக்கும்விதமாக உறையூருக்கு அருகில் உள்ள அல்லூர் கோயிலில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய கல்வெட்டில் காவிரி வெள்ளத்தால் அல்லூர் கோயில்நிலங்கள் அழிந்தன என்று கூறப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலுக்கு 400 தளிச்சேரிப் பெண்களை பணிக்காக நியமித்தான் என்ற பெரிய கோயில் கல்வெட்டு  குறிப்பிடத்தக்க மற்றொரு கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் 400 பெண்களின் பெயர்களும், அவர்களுடைய ஊர் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  அது மட்டுமில்லாமல்,  கோயிலின் அருகே ஒவ்வொருவருக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் விளையும் நிலம் வழங்கப் பெற்றுள்ளது என்பன போன்ற செய்திகள் இக் கல்வெட்டுகளில்  மிக விளக்கமாகவும் தெளிவாகவும் பொறிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களைத் தவிர, அவர்களுக்கு முன்னர் ஆட்சி புரிந்த  பல்லவர்களின் கோயில்களையும் பேணி போற்றினர்  என்பதற்குச் சான்றாக பல சோழர் மன்னர்களின் கல்வெட்டுகள்  மகாபலிபுரத்தில்  உள்ள பல்லவர் கால  கடற்கரைக் கோயிலிலும், ஆதிவராக குடைவரை கோயிலிலும் கிடைக்கின்றன.  இக்கல்வெட்டுகளின் மூலம் பல்லவர்கள் சூட்டிய கோயில் பெயர்கள்  சோழர் காலத்திலும் அவ்வாறு வழக்கத்திலிருந்ததை  நாம் அறிய முடிகிறது. 

காலங்கள் செல்லச் செல்ல சோழர்களை அடுத்து பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்கர்களும் தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற கல்வெட்டுகளின் மூலம் செய்திகளைக் கொடுத்துச் சென்றுள்ளனர். இவற்றை ஆவணப்படுத்தும் பணிகளை இன்னும் பல அறிஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுவருகின்றனர். சங்ககாலம் முதல் சோழர் காலம் (சுமார் 1300 ஆண்டுகள்) வரையிலான தமிழகத்தின் கல்வெட்டுகளின் வரலாற்றை இதுவரை நாம் கண்டோம். அதற்குப் பிந்தைய காலக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன. மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் முறையாகப் படியெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பழங்காலக் கோயில்கள், மடங்கள், பயணியர் இளைப்பாறும் இடங்கள், குன்றுகள், மலைகள், பாறைகளில் நம் வரலாற்றுச் செய்திகள் பதிந்திருக்கின்றன. புதுப்பித்தல் என்ற பெயரில் அவற்றை அழித்துவிடாமல், மறைத்துவிடாமல் படியெடுத்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குண்டு.

(நிறைவு)

 - உண்மை இதழ் 16-31. 3. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...